எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்... ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கோ?
அமரர் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படமான எங்க வீட்டுப் பிள்ளையை மீண்டும் தமிழில் தயாரிக்கப் போகிறார்கள்.
இந்தப் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 'ஆனால் யாருக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதென்று தெரியவில்லை' என்கிறது கோடம்பாக்கம்.

50 ஆண்டுகள்
இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1965-ல் வெளியான இந்தப் படத்தில் நாயகிகளாக சரோஜாதேவி, ரத்னா நடித்து இருந்தனர். சாணக்யா இயக்கினார். சமீபத்தில் இந்தப் படத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.

பாடல்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்', ‘கண்களும் காவடி', ‘குமரி பெண்ணின் உள்ளத்திலே', ‘மலருக்கு தென்றல்', ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', ‘பெண் போனால்..' போன்ற பாடல்கள் இன்றும் இனிமையின் உச்சமாகத் திகழ்கின்றன.

வெள்ளி விழா
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை நகரங்களில் 18 திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி இப்படம் ஓடி, வெள்ளிவிழாவும் கொண்டாடியது.

ரீமேக்
இப்போது எங்க வீட்டு பிள்ளை படத்தை ரீமேக் செய்ய தற்போது ஏற்பாடுகள் நடக்கின்றன.
இன்றைய ஆக்ஷன் நாயகர்கள் பலருக்கும் இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஆர்வமும் விருப்பமும் உள்ளது. இதனை விஜய் உள்பட பலரும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.

விஜயா நிறுவனம்
விக்ரம், அஜீத், சூர்யா ஆகியோரிடமும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேச்சு நடக்கிறது. எங்க வீட்டுப் பிள்ளையைத் தயாரித்த விஜயா நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











