மிகவும் வருந்தினேன்.. நடிகர் விவேக் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னை: நடிகர் விவேக்கின் உடல் நிலைகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரித்துள்ளார்.
பிரபல நடிகரான விவேக் இன்று அதிகாலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக்.
பல்ஸ் எண்ணிக்கை குறைந்து மயக்க நிலையில் இருந்த விவேக்கிற்கு உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதய செயல்பாடு
இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் படுத்துவதற்காக அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் பிரார்த்தனை
நடிகர் விவேக்கிற்கு மூச்சு திணறலும் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விவேக் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நலம் விசாரித்த அமைச்சர்
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் விவேக்கிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூக வலைதள பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களுடன் பேசியுள்ளேன்
அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவிட்டிருப்பதாவது, திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் இருதய பிரச்சினை குறித்து கேள்விப்பட்டவுடன் மிகுந்த வருத்தமுற்றேன். நடிகர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதற்கு எனது பிரார்த்தனைகள். SIMS மருத்துவமனை இயக்குனர்கள் மற்றும் நடிகர் விவேக் அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ குழுவினருடன் பேசியுள்ளேன்.. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











