பிரபல ஹீரோ படத்துக்காக அமைக்கப்பட்ட தேவாலய செட் அடித்து, உடைப்பு.. திரையுலகில் திடீர் பரபரப்பு!
கொச்சி: படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தேவாலய செட்-டை இந்து அமைப்புகள் அடித்து உடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழில், மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தவர், மலையாள நடிகர் டோவினோ தாமஸ். அதற்கு முன், பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கி இருந்த அபியும் அனுவும் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
மலையாளத்தில் கூதரா, என்னு நின்டே மொய்தீன், ஆமி, நாம், லூசிஃபர், வைரஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

குரு சோமசுந்தரம்
இவர் இப்போது 'மின்னல் முரளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது. பசில் ஜோசப் இயக்கும் இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் விளாட் ரிம்பர்க் இதில் பணியாற்றுகிறார்.

தேவாலயம்
ஷான் ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சமீ தாஹிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக எர்ணாகுளம் அருகில் உள்ள கலடியில் ஆற்றின் ஓரத்தில் தேவாலயம் செட் அமைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் தடைபட்டுள்ளதால், அதற்கு பிறகு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருந்தனர்.

அனுமதி இல்லாமல்
இந்நிலையில், அகில இந்து பரிஷத், அகில பஜ்ரங் தள் ஆகிய இந்து அமைப்புகள் அந்த தேவாலய செட்டை சரமாரியாக அடித்து, உடைத்துள்ளனர். அந்த செட்டை உடைக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரி பலோட், இந்த செட், சங்கராச்சாரியா மடத்துக்கு அருகில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் உடைத்தோம் என்று கூறியுள்ளார்.

அனுமதி பெற்றுதான்
ஆனால், அவரது புகாரை அந்தப் பகுதி பஞ்சாயத்து அமைப்பு மறுத்துள்ளது. அனுமதி பெற்றுதான் இந்த செட் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பஞ்சாயத்து கமிட்டி ஒப்புதல் அளித்த பின், பிப்ரவரி மாதம் இந்த செட் அமைக்கப்பட்டது என்று பஞ்சாயத்து உறுப்பினர் மினி பைஜூ தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கவில்லை
படத்தின் இயக்குனர் பசில் ஜோசப் கூறும்போது, 'இந்த இக்கட்டான நேரத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது துரதிர்ஷ்டமானது. நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டிய காலகட்டம் இது. கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை' என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த செட் ரூ.50 லட்சம் செலவில் போடப்பட்டுள்ளது.

பெரிய இழப்பு
தயாரிப்பாளர் சோபியா பால் கூறும்போது, 'இது சூப்பர் ஹீரோ படம். லாக்டவுன் முடிந்ததும் இந்த தேவாலயம் செட்டில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தோம். முறையான அனுமதி பெற்று இங்கு இந்த செட் கட்டப்பட்டது. நடந்துள்ள இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வழக்குத் தொடரணும்
இந்தச் சம்பவம் கேரள திரைப்படத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனியார் சொத்துக்களை மதிக்காத இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











