Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'டிராபிக் போலீஸ்தானே மாப்ள' கலகலக்க வைக்கும் காளி வெங்கட்
சென்னை: கடந்த வாரம் வெளியாகி ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் மிருதனில், நகைச்சுவை நடிகர் இல்லாத குறையைத் தீர்த்து, ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் காளி வெங்கட்.
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள மிருதன் தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
ஜெயம் ரவி, லட்சுமி மேனன் தவிர மற்ற பெரிய நடிகர்கள் யாரும் படத்தில் இல்லையெனினும் சரியான கதாபத்திரங்களைத் தேர்வு செய்து அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன்.
மிருதன்
ஊட்டியில் வசிக்கும் ஜெயம் ரவி தனது குட்டித் தங்கை அனிகாவின் மேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். இடையில் அமித் பார்கவை மணக்கக் காத்திருக்கும் லட்சுமி மேனன் மேல் ஜெயம் ரவிக்குக் காதல் வருகிறது. நண்பர் காளி வெங்கட்டுடன் போக்குவரத்துக் காவலர் வேலையை விரும்பி செய்து கொண்டிருக்கும் போது அமைச்சர் ஆர்.என்.ஆர் மனோகருடன் ஜெயம் ரவி மோதுகிறார். இதற்கிடையில் ஒரு நாள் அபாயகரமான ரசாயனக் கழிவை ஏற்றி வரும் லாரியிலிருந்து சிந்தும், கெமிக்கலை நாய் ஒன்று குடித்துவிட, வெறி பிடித்துப் போய் மனிதர் ஒருவரைக் கடித்து வைக்கிறது. கடிபட்ட மனிதருக்கும் வெறி பிடிக்க, அவர் தன் பங்குக்கு சிலரைக் கடிக்க, ஊருக்குள் அந்த கொடிய வைரஸ் பரவ ஆரம்பிக்கிறது. நிலைமை தீவிரமடைய, அதைக் கட்டுப்படுத்த முயலும் போலீஸ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை சுட்டுத் தள்ள உத்தரவிடுகிறது.
மற்றொருபுறம் ஜெயம் ரவியின் தங்கை அனிகா காணாமல் போய்விடுகிறார். இதற்கிடையில் இந்த வைரஸை அழிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் லட்சுமி மேனன், ஜெயம் ரவியிடம் உதவி கேட்கிறார். போலீசாரின் உத்தரவை மீறி ஜெயம் ரவி, லட்சுமி மேனன் ஆகியோருடன் ஒரு மருத்துவர் குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்தைக் கண்டுபிடிக்க கிளம்புகின்றனர். அவர்களை ஸோம்பிகள் தடுக்க இந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? ஜெயம் ரவிக்கு என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஜெயம் ரவி
படம் முழுவதையும் தனது தோளில் மட்டுமே சுமந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஜெயம் ரவி. தங்கை அனிகாவின் மேல் அன்பு காட்டுவது, லட்சுமி மேனனுடன் காதலில் விழுவது, தங்கையைக் காணாமல் தவிப்பது ஆகிய காட்சிகளில் ஜெயம் ரவியின் நடிப்பு கவருகிறது. மருந்து கண்டுபிடிக்க செல்லும் முயற்சியில் தனியே எல்லோரையும் ஜெயம் ரவி காப்பாற்றுவது நம்பும்படி இல்லை, எனினும் ஜெயம் ரவியின் உடற்கட்டு அதனை நம்பவைப்பதை மறுக்க முடியவில்லை.
லட்சுமி மேனன்
அழகான மருத்துவர், 2 பாடல்கள் என்று வழக்கமான வேடம் என்றாலும் கொடுத்த வேடத்தில் பொருந்திப் போகிறார் லட்சுமி மேனன். ஜெயம் ரவியை ஈர்க்கும் காட்சிகள், தன்னைக் காப்பாற்ற முன்வரும் ஜெயம் ரவியைப் பார்த்து உணர்ச்சியற்று நிற்பது, மருத்துவர் என்று கிடைத்த சில காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸோம்பியாக மாறிய ஜெயம் ரவியை காப்பாற்றும் பொறுப்பு லட்சுமி மேனனுக்கு இருப்பதால் 2 வது பாகத்தில் அவரின் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று நம்பலாம்.
அனிகா
'என்னை அறிந்தால்' போலவே இதிலும் காட்சிக்குத் தேவையான நடிப்பை மட்டும் வழங்கியிருக்கிறார் அனிகா. ஸோம்பி மனிதர்களால் தாக்கப்பட்ட நிலையிலும் 'என் அண்ணன் பர்ஸ்ல ஒரு பொண்ணோட போட்டோ இருக்கு. அந்தப் பொண்ணை தேடிக் கண்டுபிடிச்சி, அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வையுங்க' என்று லட்சுமி மேனனிடம் சத்தியம் வாங்கும் காட்சிகள் அனிகாவின் நடிப்பிற்கு சான்று.
காளி வெங்கட்
ஜெயம் ரவி-லட்சுமி மேனன் கெமிஸ்ட்ரியை விட ஜெயம் ரவி- காளி வெங்கட் கெமிஸ்ட்ரி நன்றாக எடுபட்டிருக்கிறது. தாக்க வரும் மனிதர்களை சுடத் தெரியாமல் தடுமாறி ஜஸ்ட் மிஸ் என்று சொல்லும் போதும், டிராபிக் போலீஸ் தானே மாப்ள என்று ஜெயம் ரவியிடம் விளக்கும் காட்சிகளிலும் தியேட்டரை அதிர வைக்கிறார் காளி.
காமெடி நடிகர்
படத்தில் தனியாக காமெடி நடிகர் இல்லாத குறையை காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர், ஸ்ரீமன் ஆகியோர் தீர்த்து வைத்து விடுகிறார்கள்.
அதிலும் காளி வெங்கட் தன் பங்கிற்கு வெளுத்து வாங்கியிருக்கிறார்.'ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு', 'நீ மொதல்ல போனை வைமா','டிராபிக் போலீஸ்தானே மாப்ள' என்று காமெடி செய்வதிலும், 'எனக்குக் காயம் இருந்தா யோசிக்காம சுட்டுடு மாப்ள' என்று துப்பாக்கியை நீட்டி கண் கலங்குவதிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
ஆர்.என்.ஆர் மனோகர்
காளி வெங்கட்டுக்கு சமமாக காமெடி செய்வதில் தன் பங்கிற்கு எந்தக் குறையையும் ஆர்.என்.ஆர் மனோகர் வைக்கவில்லை. 'என்னது யூடியுப்ல போட்டாங்களா? 3௦௦௦ லைக்ஸா?' என்று அதிர்வது, வண்டிக்கு வழிவிட மறுக்கும் போலீசிடம் 'தம்பி நான் தான் அமைச்சர்' என்று தன் முகத்தை காட்டுவது,எல்லோரும் சொல்லிட்டாங்க இருந்தாலும் நானும் ஒருமுறை சொல்லிடுறேன் 'என்னமா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா' என்று ஸோம்பிகளிடம் கேட்பது போன்ற இடங்களில் அமைச்சரின் நடிப்பு அட்டகாசம்.
அமித்
'உன்னக் காப்பாத்த ஆயிரத்தில் ஒரு வாய்ப்பு இருந்தாலும் வந்திருப்பேன், ஏன் இலட்சத்தில ஒரு வாய்ப்பு இருந்தாலும் அங்க நான் வந்திருப்பேன்' என்று லட்சுமி மேனனிடம் பதறாமல் காமெடி செய்து கவர்கிறார் 'கல்யாணம் முதல் காதல் வரை' புகழ் அமித்.
கிரேன் மனோகர், ஸ்ரீமன்
இதே போன்று படத்தில் கல்யாண புரோக்கராக வரும் கிரேன் மனோகர், மால் செக்யூரிட்டியாக வரும் ஸ்ரீமன், தலைமை மருத்துவராக வந்து வில்லத்தனம் செய்யும் ஜீவா ரவி ஆகியோரும் தங்களது பாத்திரங்களை அறிந்து நடித்திருப்பதால் தமிழின் முதல் ஸோம்பியான மிருதனை சில குறைகள், லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரசிக்க முடிகிறது.
மிருதன் 2
கதைப்படி ஸோம்பியாக மாறிய ஜெயம் ரவி சென்னைக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதால் மிருதன் 2 சென்னையை சுற்றி நகரும் என்பது கண்கூடாகத் தெரிகிறது. லட்சுமி மேனன் அதுக்குள்ள மருந்து கண்டுபிடிச்சிடுவாங்களா?