முதலமைச்சர் ஸ்டாலின் கையில் ஆஸ்கர் விருது.. ஆசி வாங்கிய பெண் இயக்குநர்.. குவியும் பாராட்டு!
சென்னை: தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) படத்துக்காக ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கிய ஊட்டியை சேர்ந்த பெண் இயக்குநர் கார்த்திகி கான்ஸ்லேவ்ஸை அழைத்து பாராட்டி ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகயை வழங்கி உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த 95வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியாவிற்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்ததை யாராலும் இன்னும் பல காலத்திற்கு மறக்கவே முடியாது.
ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு, தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என இரு படைப்புகளுக்கு இந்தியா ஆஸ்கரை வென்றது.

ஆஸ்கர் வாங்கிய இந்திய பெண்கள்
95வது ஆஸ்கர் விழாவில் இந்திய பாரம்பரியத்தை உயர பறக்கவிட்டு இருந்தனர் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா. பட்டுச் சேலையில் பக்காவாக ஆஸ்கர் மேடை ஏறி ஆஸ்கர் விருதை குனீத் மோங்கா வாங்கியதும் இயக்குநர் கார்த்திகி கொடுத்த ஆஸ்கர் ஸ்பீச்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

அன்புக்கு கிடைத்த ஆஸ்கர்
அநாதையாக இருந்த இரு யானைக் குட்டிகளான ரகு மற்றும் பொம்மியை எடுத்து தங்கள் குழந்தைகளை போல வளர்த்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகளின் அன்பை அப்படியே அவர்களுடன் பயணித்து ஒரு அற்புதமான குறும்படமாக இயக்கி ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்ட பல வெளிநாட்டு ஆவண குறும்படங்களுடன் கடும் போட்டிப் போட்டு கடைசியாக கார்த்திகி கோன்சால்வஸ் ஆஸ்கர் விருதினை தட்டித் தூக்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
ஊட்டியில் வளர்ந்த கார்த்திகி கோன்சால்வஸ் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டி ட்வீட் போட்ட நிலையில், தற்போது இயக்குநரை நேரிலேயே அழைத்து அவருக்கு பரிசுத் தொகை மற்றும் அரசு சார்பிலான மரியாதையை செலுத்தி உள்ளார்.

ஒரு கோடி பரிசு
தமிழ்நாடு அரசு சார்பாக தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வஸ்க்கு ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகையை பரிசாக வழங்கி உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்னமும் உயர்வான படங்களை இயக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கையில் ஆஸ்கர்
முதலமைச்சர் ஸ்டாலின் கைகளில் ஆஸ்கர் விருதினை கொடுத்து அவரது ஆசியை பெற்றுக் கொண்டார் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ் அதன் புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்திலேயே ட்வீட் போட்டு கார்த்திகியையும் அவரது படைப்பையும் வாழ்த்தி உள்ளார் ஸ்டாலின். முதுமலையில் யானைகளை பராமரிப்பவர்களுக்கும் உதவிகளை செய்ய முன் வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











