நடிகை சௌந்தர்யா திட்டமிட்டு கொல்லப்பட்டாரா? நடிகர் மோகன் பாபுவின் ஸ்கெட்ச்சா அந்த விமான விபத்து?
ஹைதராபாத்: தென்னிந்திய திரையுலகில் பலரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவரின் மறைவு என்றால் அது நடிகை சௌந்தர்யாவின் மறைவு தான். தனியார் விமானத்தில் சென்று கொண்டு இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவர் அகால மரணம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது சகோதரரும் மறைந்தார். இது விபத்து என இத்தனை ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இது திட்டமிடப்பட்ட கொலையா என்ற கோணத்தில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் 90களின் இறுதியில் தொடங்கி 2000களில் அவர் உயிருடன் இருந்த வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவருடன் நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி விமான விபத்தில் இறந்தார்.

சௌந்தர்யா கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர். மருத்துவம் படிக்கத் தொடங்கிய சௌந்தர்யா, தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆசையால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் அறிமுகமாகி, அவரது அசத்தலான நடிப்பில், முன்னணி நடிகையாக சில ஆண்டுகளில் மாறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார்.

சௌந்தர்யா: பாரதிய ஜனதா கட்சி அபிமானியான நடிகை சௌந்தர்யா, அந்த கட்சிக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள தனியார் விமானத்தில் சென்று கொண்டு இருந்தபோது, விமான விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சௌந்தர்யா உயிரிழந்த போது அவர் கர்ப்பமாக இருந்தார் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவரும் அவரது சகோதரரும் உயிரிழந்தார். அவர்களின் உடலைத் தேடிய உறவினர்களுக்கு உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. சௌந்தர்யாவின் மரணம் தென்னிந்திய திரையுலகில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அளவில் பரபரப்பைக் கிளப்பியது. பாஜக அபிமானியாக அவர் இருந்ததால், அரசியலிலும் களமிறங்கி போட்டியிட சௌந்தர்யா திட்டமிட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மோகன் பாபு: இப்படியான நிலையில் நடிகை சௌந்தர்யா விபத்தில் மரணிக்கவில்லை, அவரது மரணம் திட்டமிடப்பட்ட கொலை என்ற திடுக்கிடும் தகவல்கள் உலா வருகிறது. இது தொடர்பாக கன்னட ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், நடிகர் மோகன் பாபுவுக்கும் சௌந்தர்யாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. அதாவது ஜல்பள்ளி கிராமத்தில் சௌந்தர்யாவுக்கும் அவரது சகோதரர் அமர்நாத்துக்கும் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன் பாபு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் இருவரும் தர மறுத்துள்ளார்கள். இதனால் ஏற்பட்ட பிரச்னை ஏற்பட்டுள்ளது. விமான விபத்தில் இருவரும் மறைந்த பின்னர், மோகன் பாபு அந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

ஷாக்: இப்படியான நிலையில் சௌந்தர்யாவின் மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு இருப்பதாக, ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்ட காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோகன் பாபு மீது நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இது திடுக்கிடும் செய்தியாக மாறியுள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











