ஜெகனுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம்- சொல்கிறார் 'தாய்மாமன்' மோகன்பாபு!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே ஜெயிலில் தொழில் அதிபர் நிம்மகட்ட பிரசாத்தும் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தொழில் அதிபர் நிம்மகட்ட பிரசாத் ஆகியோரை நடிகர் மோகன்பாபு, அவரது மகனும் நடிகருமான விஷ்ணு ஆகியோர் சந்தித்தனர்.
ஜெகனை சந்தித்து விட்டு வந்த மோகன்பாபு சிறைக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், "மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி எனது சகோதரி. எனவே ஜெகன்மோகன் ரெட்டிக்கு நான் தாய் மாமன் என்ற முறையில் அவரை சிறையில் என் மகனுடன் சென்று சந்தித்தேன். தொழில் அதிபர் நிம்மகட்டபிரசாத் எனது நண்பர்.
எனவே அவரையும் சந்தித்தேன். தற்போதைய அரசியல் மகாபாரத யுத்தத்தை நினைவுபடுத்துகிறது. டில்லியில் சில சகுனிகள் உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டிக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. மகாபாரத சகுனியால் யாருக்கு நல்லது நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இங்கும் அதுதான் நடக்கப்போகிறது.
சிரடி சாயிபாபாவின் ஆசியால் ஜெகன்மோகன் ரெட்டியும், நிம்மகட்டபிரசாத்தும் விரைவில் வெளியே வருவார்கள். இருவரையும் சந்தித்த பிறகு இதயம் பாரமாகிவிட்டது. மிகுந்த வேதனையுடன் திரும்பி வந்தேன்," என்றார்.
ஜெகன் கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு, நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார் மோகன்பாபு.
மோன்பாபு தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது ஆதரவும் ஜெகன் பக்கம் திரும்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











