சாதி வெறியால் நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவம்.. மோகன் ஜிக்கே கடுப்பாகிடுச்சே.. பிரபலங்கள் கண்டனம்
சென்னை: திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் 17 வயது மாணவனையும் அவனது 14 வயது தங்கையையும் சாதி வெறிக் காரணமாக சில மாணவர்கள் வீடு புகுந்து சரமாரியாக இருவரையும் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்துக்கு முன்னதாக அனைவருமே வெள்ளைக்காரர்களிடம் அடிமையாக இருந்த நிலையில், சுதந்திரத்துக்கு பிறகு இந்தியர்களாக வாழாமல் மீண்டும் ஆண்ட சாதி, அடிமை சாதி என சாதி வெறியை பற்றிக் கொண்டு வாழ்ந்து வருவது கோழைத்தனம் என பிரபலங்களும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நாங்குநேரியில் பள்ளியில் நடந்த வன்முறை: திருநெல்வேலி நாங்குநேரியில் கூலித் தொழிலாளியின் 17 வயது மகன் மற்றும் 14 வயது மகளை 3 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று வீடு புகுந்து வெட்டிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் நடந்த பிரச்சனை காரணமாக பள்ளிக்கே செல்லாமல் அந்த மாணவரும் அந்த மாணவியும் வீட்டில் இருந்துள்ளனர்.
நள்ளிரவு 10.30 மணிக்கு திடீரென புகுந்த 3 பேர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்த நிலையில், அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். வெட்டுப்பட்ட இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஊர் மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டது மேலும், பரபரப்பைக் கூட்டியது.

மாரி செல்வராஜ் ட்வீட்: கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும் என மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கொந்தளித்த ஜிவி பிரகாஷ்: "தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.. சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" என ஜிவி பிரகாஷ் கொந்தளித்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் பொது மக்களும் சாதி ரீதியாக நடந்த இந்த பிரச்சனைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மோகன் ஜியும் கண்டனம்: "மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டி கொள்கிறேன்.. இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்.." என திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











