எல்லை மீறிய மோகன் ஜி கைது ஆவாரா?.. குவிந்த கண்டனங்கள் - பம்மிய பகாசூரன்
சென்னை: பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன் ஜி முகநூலில் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அவருக்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி, மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

சர்ச்சைகளை கிளப்பிய மோகன் ஜியின் படங்கள்
மோகன் ஜி முதல் முதலில் இயக்கிய பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படம் பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய திரௌபதி திரைப்படம் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் உருவாக்கியது. நாடக காதல் என்ற பதத்தை வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது மோகன் ஜி தாக்குதல் நடத்தியிருக்கிறார் என்று கண்டனங்களும் குவிந்தன. மேலும் படத்தில் நடித்த கதாநாயகியும் அந்தப் படத்தில் நடித்தது தொடர்பாக வருத்தமும் தெரிவித்திருந்தார்.

சர்ச்சைகளில் ருத்ரதாண்டவம் ஆடிய மோகன் ஜி
அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய படம் ருத்ரதாண்டவம். இந்தப் படத்தில் ரிச்சர்ட், கெளதம் வாசுதேவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். திரௌபதி போலவே இந்தப் படமும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனையும் மோகன் ஜி வம்புக்கு இழுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி சிறுபான்மையினர் மதத்தையும் சீண்டியிருக்கிறார் என பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் மோகன் ஜிக்கு கருத்து சுதந்திரம் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர்.

பிற்போக்குத்தனமானதா பகாசூரன்?
இந்தச் சூழலில் அவர் தற்போது இயக்கியிருக்கும் பகாசூரன் படமும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஸ்மார்ட் ஃபோனால் வரும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு கொடுக்கிறேன் என்ற பெயரிலும், பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசுகிறேன் என்ற பெயரிலும் மோகன் ஜி பிற்போக்குத்தனமாக படத்தை எடுத்துவைத்திருக்கிறார். குறிப்பாக நடக்கும் தவறுகளுக்கு எல்லாம் பெண்கள் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவதும், கல்லூரிக்கு செல்வதும்தான் காரணம் என பதிவு செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை திருந்த சொல்கிறாரே தவிர பாதிப்பு ஏற்படுத்தியவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் எனவும் பலர் கூறி வருகின்றனர்.

முகநூலில் மோகன் ஜியின் சர்ச்சை பகிர்வு
இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது முகநூலில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், மாணவரும், மாணவியும் சீருடையில் நெருக்கமாக இருப்பதுபோல் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. அந்த வீடியோ ஒரு முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை மோகன் ஜியும் பகிர்ந்திருக்கிறார். மேலும், அந்த வீடியோவில் இருக்கும் இருவரின் முகங்களும் தெளிவாக பதிவாகியிருந்தன.

மோகன் ஜிக்கு குவியும் கண்டனங்கள்
பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்பான ஆபாச வீடியோவை யாரும் பகிரவோ, பார்க்கவோ கூடாது. மேலும் அவர்கள் தொடர்பான எந்த அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடாது என சட்டம் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மதிக்காத மோகன் ஜி இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த அடிப்படையைக்கூட அறிந்துகொள்ளாத மோகன் ஜியா சமூகத்தின் விழிப்புணர்வுக்காக படம் எடுக்கிறார் என சமூக வலைதளவாசிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
மேலும், அவர் தொடர்ந்து எல்லை மீறி செல்கிறார். உடனடியாக அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்துகொண்ட மோகன் ஜி தான் பகிர்ந்திருந்த வீடியோவை முகநூல பக்கத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











