என்னது எனக்கு எய்ட்ஸா?.. குடும்பமே நொந்துவிட்டது.. செம போங்கு.. ஓபனாக பேசிய மோகன்
சென்னை: ரசிகர்களால் மைக் மோகன் என்று அழைக்கப்படுபவர் மோகன். அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டானதால் அவர் அவ்வாறு அழைக்கப்பட்டார். 80களில் படு ஃபேமஸாக வலம் வந்த அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை; திடீரென சினிமாவிலிருந்து ஆள் காணாமல் போனார். இதனையடுத்து பல வருடங்கள் கழித்து இப்போது ஹரா, GOAT ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் கோலோச்சியிருந்த காலம் அது. அப்போது பாலுமகேந்திரா கோகிலா என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான் மோகன் முதன்முறையாக சினிமாவில் அறிமுகமானார். அதில் கமல் ஹாசன், ஷோபா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி மோகனுக்கும் நல்லதொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு மலையாளத்தில் அறிமுகமான அவர்; பின்னர் மூடுபனி படத்தின் மூலம் தமிழில் இண்ட்ரோ ஆனார்.

பிஸி நடிகர்: மூடுபனி படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மோகனுக்கும் சிறந்த அடையாளத்தை தந்தது. இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ஹீரோவானார் மோகன். அதனைத் தொடர்ந்து தமிழில் அவர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, லாட்டரி டிக்கெட், கோபுரங்கள் சாய்வதில்லை என்று வரிசையாக படங்களில் நடித்தார். இதனால் அவர் பிஸியான நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார்.
முன்னணியில் மோகன்: தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டாகின அல்லது சுமார் ஹிட்டாகின. பிறகு லெஜெண்ட் இயக்குநர்களின் பார்வை மோகன் மீது திரும்பியது. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் ரெட்டை வால் குருவி, மணிரத்னம் இயக்கத்தில் மௌன ராகம், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள், ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மெல்ல திறந்தது கதவு என்று அவர் நடித்ததெல்லாம் ஹிட்டாகின. குறிப்பாக நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
ரஜினி, கமலுக்கு டஃப்: கமல் ஹாசன் ஹீரோவாக நடித்த கோகிலா படத்தில் அறிமுகமான மோகன் ஒருகட்டத்தில் கமலுக்கே போட்டியாக வளர்ந்தார். அதேபோல் ரஜினிக்கும் டஃப் கொடுக்க ஆரம்பித்தார். முக்கியமாக மோகன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருப்பவை. அதேபோல் பாடலில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷெனுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனாலேயே அவர் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.
சினிமாவிலிருந்து விலகல்: இப்படி அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு; ஆள் காணாமல் போனார். பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஜய் நடிக்கும் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர்; ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படம் நாளை வெளியாகிறது. இந்தச் சூழலில் ஹரா படத்துக்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.
மோகன் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்துவிட்டதாக 90களில் சொன்னார்கள். அந்த செய்தி கேட்டு என்னுடைய ரசிகர்கள் பதற்றமடைந்து எனது வீட்டுக்கு வந்துவிட்டார்கள். எனக்கு மட்டுமில்லை என்னுடைய குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியாக அந்த செய்தி இருந்தது. பிறகு என்னை ஒருவர் பேட்டி எடுக்க வந்தார். அப்போது அவர் என்னிடம், எய்ட்ஸ் இல்லைனு சொல்லுங்க சார் என்று கேட்டார்.
இது போங்கு: உடனே நான், 'டே இது போங்கா இருக்கேடா. நீங்களே எனக்கு எய்ட்ஸ் இருக்குனு சொல்வீங்க, இல்லைனு நான் சொல்லனுமானு கேட்டேன்'.இதிலும் நான் ஒரு ட்ரெண்ட் செட்டராகத்தான் இருந்திருக்கிறேன். உண்மை என்னவென்று எனக்கு மட்டும்தான் தெரியும். என்னை தவிர்த்து எனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியும். எனக்கு எய்ட்ஸ் என்பது உண்மையாக இருந்தால்தானே ஃபீல் பண்ண முடியும். அதனால் எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











