மோகன்லால் ரசிகர்களுக்கு ஓணம் வந்தாச்சு... இட்டிமணி மேட் இன் சீனா செம கலக்கல்
சென்னை: மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகர் மோகன் லால் காமெடியில் கலக்கி இருக்கும் இட்டிமணி மேட் இன் சீனா படம் நேற்று வெளியானது. இப்படத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ராதிகா சரத்குமாரும் இணைந்து ரசிகர்களுக்கு ஓணம் பண்டிகைக்கு பரிசு கொடுத்துள்ளனர்.
1985ஆம் ஆண்டில் கூடும் தேடி எனும் மலையாளப் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த மோகன்லால், ராதிகா சரத்குமார் 35 வருடங்களுக்கு பிறகு ஓணம் ஸ்பெஷல் திரைப்படமான இட்டிமணி மேட் இன் சீனா படம் மூலம் மீண்டும் இணைகிறார்கள். இப்படம் கேரளா முழுவதும் வெளியாகி செம போடு போட்டு வருகிறது.

கேரளாவின் மிகவும் முக்கியமான பண்டிகை ஓணம் பண்டிகை. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை செப்டம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்த நாளன்று மக்கள் மிகுந்த கொண்டாட்டத்தோடு பண்டிகையை கொண்டாடுவர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதி ஓணம் ஸ்பெஷல் திரைப்படங்கள்.

மோகன்லாலின் குறும்பு, குறுகுறுப்பு, உதட்டில் இழையோடும் மெல்லிய நகைச்சுவையை வெளிப்படுத்தும் அசால்ட்டான முகபாவனை இவற்றைத் தான் அவருடைய ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்களில் இவற்றை காண முடியாமல் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அவருடைய விண்டேஜ் நடிப்பை காண முடியவில்லையே என்று ஏங்கித் தவித்தனர். இதனை உணர்ந்து கொண்ட மோகன்லாலும் தன்னுடைய ரசிகர்களையும் மக்களையும் குஷிப்படுத்துவதற்காக முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஆன்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் ஜிபி-ஜோஜு இயக்கியுள்ள இட்டிமணி மேட் இன் சைனா படத்தில் மோகன்லால், ராதிகா சரத்குமார், ஹனி ரோஸ், அஜூ வர்கீஸ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கியமாக கேரளாவிலும் சில காட்சிகள் சீனாவிலும் நடைபெற்றுள்ளது.

இப்படத்தில் மோகன்லால் உடன் ராதிகாவும் சேர்ந்து கொண்டு காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். இதனால் இவர்கள் இருவரின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் படியாகவே இருக்கும். அதோடு மோகன்லால் இப்படத்தில் சைனிஷ் பாஷை பேசி கலக்கியிருப்பார். மொத்தத்தில் பழைய மோகன்லாலை இந்தப் படத்தல் பார்க்கலாம் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த காமெடி திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தினை பார்த்த ரசிகர்கள் கூட்டமும் படத்தை மிகவும் மகிழ்ச்சியோடு கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ளனர். மோகன்லாலுக்கு இப்படமும் ஒரு வெற்றி படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











