Drishyam 3: ஜார்ஜ் குட்டிக்கு தொடரும் சிக்கல்.. திரிஷ்யம் 3 படத்தை உறுதி செய்த மோகன் லால்..
கொச்சி: தமிழ் சினிமா ரசிகர்கள் மெல்ல மெல்ல மலையாள சினிமாவை ரசிக்க தொடங்கிய காலகட்டம் அது. இணையமும் மக்கள் மத்தியில் புழங்குகிற காலத்தின் தொடக்கமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் வெளியான திரிஷ்யம் படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2013ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை தமிழில் கமல்ஹாசன், பாபநாசம் என்ற பெயரில் எடுத்தார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தில் மோகன்லால் கமிட் ஆகியுள்ளதை அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படத்திற்கு ரசிகர்கள் இன்றைக்கும் உள்ளார்கள். காரணம் படங்களில் இடம் பெற்றுள்ள கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதை அமைப்பு, திரைக்கதை நகர்வு என படம் அனைத்திலும் பாராட்டுகளை குவித்தது. படம் மலையாளத்தில் மட்டும் இல்லாமல், ரீமேக் செய்யப்பட்ட மொழிகளான, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஹிட் அடித்தது.

ஜித்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் மோகன் லால் உடன் மீனா, கலாபவன் மணி, அன்சிபா ஹாசன், எஸ்தர், ஆஷா சரத், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்தனர். படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது. படத்தில் மோகன்லால் நடிப்பு பெருமளவில் பாராட்டுக்களை குவித்தது. திரிஷ்யம் படம் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர் பல வெற்றிப் படங்களுக்கு இரண்டாம் பாகம் இந்தியா முழுவதும் வெளியாகிக் கொண்டு இருந்தது.

திரிஷ்யம்: எனவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. திரிஷ்யம் 2 படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த கலாபவன் மணி இடைப்பட்ட காலத்தில் காலமானதால் படத்தில் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை படக்குழுவினர் நடிக்க வைத்திருந்தனர். இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இரண்டாம் பாகம் வெளியாகும் போது ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் நன்கு போய்ச் சேர்ந்து இருந்ததால், திரிஷ்யம் 2 படத்திற்கு உலகளாவிய ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது.

ஜித்து ஜோசப்: இரண்டாம் பாகத்தின் முடிவின் போது, இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் வாழ்க்கையில் நடந்ததை திரைப் படமாக எடுத்துள்ளார் என பலரும் கூறினார்கள். காரணம், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இயக்குநரின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, இயக்குநர்தான் கொலை செய்து இப்படிச் செய்துள்ளார் என்றெல்லாம் சில ரசிகர்கள் கூறிவந்தார்கள்.

திரிஷ்யம் 3: இப்படியான நிலையில் திரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை மோகன் லால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " கடந்த காலம் என்றைக்கும் உறங்குவதில்லை.. திரிஷ்யம் 3 உறுதி செய்யப்பட்டது" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இத்துடன் அவர், இயக்குநர் ஜித்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மோகன் லாலின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











