இதுல யாரை காலி பண்ணப் போறாங்கன்னு தெரியலையே.. ரெடியாகிறது மெகா ஹிட் 'த்ரிஷ்யம்' 2 ஆம் பாகம்!
திருவனந்தபுரம் : மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
Recommended Video
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத், சித்திக், அன்ஷிபா ஹாசன் உட்பட பலர் நடித்த மலையாள படம் த்ரிஷ்யம்.
2015 ஆம் ஆண்டு வெளியான இந்த த்ரில்லர் படம், கேரளாவில் சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் சாதனை நிகழ்த்தியது.

பாபநாசம்
இதையடுத்து தமிழில் கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். இதையும் ஜீது ஜோசப்பே இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது.

அக்ஷய் குமார்
இது தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பிலும் ரீமேக் ஆகி வரவேற்பைப் பெற்றது. சிங்களத்திலும் ரீமேக் ஆன இந்தப் படம், சீனாவிலும் ரீமேக்காகி சாதனைப் படைத்தது. அங்கு, ஷீப் வித்தவுட் அ ஷெப்பர்ட் என்ற பெயரில் உருவாகி ஹிட்டானது.

ஆதாரங்கள்
தனது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் போலீஸ் அதிகாரி மகனை மகளும், மனைவியும் அடித்துக் கொல்கிறார்கள். அவன் உடலையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் கமல்ஹாசன் மறைத்து, இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றுவது கதை. இந்தக் கதை பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது, இந்தப் படத்தின் அடுத்தப் பாகம் உருவாவதைப் பற்றி கூறியிருந்தார் ஜீத்து ஜோசப்.

2 ஆம் பாகம்
இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன் லால், த்ரிஷா நடிக்கும் ராம் என்ற படத்தை லாக்டவுனுக்கு முன்பாக ஆரம்பித்தார். அதன் கதை உஸ்பெஸ்கிஸ்தான், பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் நடக்கிறது. லாக்டவுன் காரணமாக இப்போது அங்கு சென்று ஷூட்டிங் நடத்த வாய்ப்பில்லை என்பதால் அந்தப் படத்துக்கு முன்பாக, த்ரிஷ்யம் படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்குகிறார்.

கொல்லப் போகிறார்கள்
இதில் மோகன்லால் உட்பட முதல் பாகத்தில் நடித்தவர்கள் நடிக்க இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை தயாரித்த அந்தோணி பெரும்பாவூர் இதையும் தயாரிக்கிறார். முதல் பாகத்தில் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மகனை கொன்றார்கள். அடுத்தப் பாகத்தில் யாரை கொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லையே என்கிறார்கள் ரசிகர்கள்.

அரசு அனுமதி
லாக்டவுன் முடிந்து கேரள அரசு அனுமதி அளித்த பின், இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. மோகன்லால் நடித்த, லூசிஃபர் படமும் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது. அதன் அடுத்த பாகமும் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











