பேபிஸ் டே அவுட் போல் உருவாகும் 'மங்கி டாங்கி'... குழந்தை வளர்ப்பு குறித்து பேசுகிறது!
பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வை பற்றி பேசும் படம் மங்கி டாங்கி.
சென்னை: பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்காக உருவாகும் படம் 'மங்கி டாங்கி'.
"குழந்தை வளர்ப்பில்" அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்குகின்றனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார்.

படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஹஷீர், "இயந்திரமயமான இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய சவால். தற்கால குழந்தைகள் பெற்றோர்களின் அன்புக்காகவும் நேரத்திற்காகவும் ஏங்குகிறார்கள். அன்புக்கு ஏங்கும் குழந்தையை, இருவர் கடத்தினால் என்ன ஆகும் என்னும் சுவாரசியமான களத்தில் ஹாலிவுட் திரைப்படம் "பேபிஸ் டே அவுட்" பாணியில், பயணிக்கும் திரைப்படமே இது.

இயக்குனர்கள் அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் கதையை கூறிய போது, என்னால் எளிதாக கதையின் ஓட்டதோடும் , கதாபாத்திரங்களோடும் இணைத்து கொள்ளமுடிந்தது. அதுவே என்னை படத்தை தொடங்குவதற்கான உத்வேகத்தையும் கொடுத்தது. இப்படம் அனைத்து மக்களும் ரசிக்கும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை" என்றார் தயாரிப்பாளர் ஹஷீர்.

"மங்கி டாங்கி" திரைப்படத்தில் நடிகர்கள் ஸ்ரீராம், கிஷோர், பேபி யுவினா, யோஜ்ஜைபீ மற்றும் வந்தனா இணைந்து நடிக்கிறார்கள். சூரஜ் குரூப் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ரிசல் ஜைனி படத்தொகுப்பில் , சங்கீத் பாடல்களை எழுதுகிறார். தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











