மஞ்சும்மல் பாய்ஸ்.. மலையாள பொறுக்கிகள் என்று சொன்ன சங்கி.. ஜெயமோகனை விளாசிய இயக்குநர்
சென்னை: சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் வெளியாகி இப்படம் தமிழகத்தில் வசூலை அள்ளிவரும் நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ், மலையாள பொறுக்கிகளின் கூத்தாட்டம் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதை இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை ஒன்றை நேற்று வெளியிட்டு இருந்தார். அதில், சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி

கேரளத்து பொறுக்கிகள்: மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலாமையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது.

குடிகுடி குடிதான்: குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும் - இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள் என்று ஜெயமோகன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
சங்கிகள்: எழுத்தாளர் ஜெயமோகன் மலையாளிகளை பொறுக்கிகள் என்று விமர்சித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் பொறுக்கிஸ் என்று சொன்ன அந்த சங்கியும் (சுப்பிரமணியன் சுவாமி), மலையாளப் பொறுக்கிகள் என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் - கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!" எனப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











