மூக்குத்தி அம்மன் 2.. இந்தியாவின் மிகப்பெரிய படமாக இருக்கும்.. ஏன்னா கதை அப்படி.. சுந்தர்சி பேட்டி!
சென்னை: சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கியது. இதில், மத்திய அமைச்சர் ஏஎல்முருகன், நடிகை நயன்தாரா, மீனா, குஷ்பு, அபிநயா, யோகிபாபு, மைனா நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுந்தர் சி மூக்குத்தி அம்மன் படம் இந்தியாவின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றார்.

இதில் பேசிய சுந்தர் சி, மூக்குத்தி அம்மன் 2 படம் தயாரிப்பாளர் ஐசரி சாரினுடைய விஷன். எழுத்தாளராக, இயக்குனராக எங்களுக்கு கனவுகள் அனைத்தும் பிரம்மாண்டமாக வரும், ஆனால், அதை நிறைவேற்றி காட்டுவதற்கு ஒரு பின்பலம் ஒரு சக்தி தேவைப்படும் அந்த சக்தி தான் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்

நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் அவர்கள். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் கதையை ஆரம்பிக்கும் போது லைட்டாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால், கதை போக அது ஒரு மிகப்பெரிய கதையாக மாறிவிட்டது இதுவரை என்னுடைய சினிமா வரலாற்றிலேயே நான் இப்படி ஒரு படத்தை இயக்கியதில்லை என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய ஒரு படமாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக மூக்குத்தி அம்மன் 2 படம் இந்தியாவிலேயே மிகப்பெரிய படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

மூக்குத்தி அம்மன் 2: படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் ஐசரி கணேஷ் சாரிடம் தயங்கி தயங்கித் தான் இந்த விஷயத்தை கூறினேன். ஆனால், அவர் எங்களை விட உற்சாகம் அடைந்து விட்டார். இந்த படத்தின் பூஜையின் பிரம்மாண்டத்தை பார்த்தாலே அவர் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் என்பது உங்களுக்கே தெரிந்து இருக்கும். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தின் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ அவர்களே இந்த படத்திலும் இருக்கிறார்கள்.

பிரம்மாண்டமான படம்: மூக்குத்தி அம்மன் 2 ஹீரோயின் ஆக நடிப்பதற்கு ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் தேவை அழகு, அழகு மட்டுமில்லாமல் பர்சனாலிட்டி, மற்றும் திறமையான நடிகை தேவை அப்படி நினைக்கும் போது முதலில் நினைவுக்கு வந்தது ரெஜினா தான். முதலில் அவர் இந்த படத்தில் நடிப்பார்களா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், கதையை சொன்னதும் எங்களை விட ஆர்வமாக இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்றார் அவருக்கு என் நன்றி என்ற சுந்தர் சி, இந்த படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகளை அறிமுகப்படுத்தினார்.

ஒரு வார விரதம்: முன்னதாக இந்த விழாவில் பேசிய ஐசரி கணேஷ், ஐந்து வருடங்களுக்கு முன் மூக்குத்தி அம்மன் என்ற தலைப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என ஆர்ஜே பாலாஜி என்னிடம் கதை சொன்னார். எங்களின் குல தெய்வம் சாமி மூக்குத்தி அம்மன் என்பதால் படத்தின் தலைப்பைக் கேட்டவுடனே எனக்கு பிடித்து போய் ஓ.கே. சொல்லிவிட்டேன். அப்போது அம்மனாக யாரை நடிக்க வைக்கலாம் எனக் கேட்ட போது அவர் சொன்ன பெயர் நயன்தாரா. முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் நயன்தார தான், அவர், முதல் பாகத்திலும் விரதம் இருந்து அம்மனாக நடித்துக் கொடுத்தார். அதே போல் இந்த இரண்டாம் பாகத்திற்கு பூஜை போடப்போகிறோம் என்று சொன்னதும், ஒரு வாரமாக விரதம் இருந்து வருகிறார். அவரோடு அவரது குழந்தைகள், குடும்பம் என அனைவரும் விரதத்தில் இருக்கின்றனர் என்றார்..


Click it and Unblock the Notifications











