'நையாண்டிலாம் இல்ல... மூக்குத்தி அம்மன் கதை இப்படித்தான் இருக்கும்... ஆர்.ஜே.பாலாஜி சொல்றதை கேளுங்க!
சென்னை: மூக்குத்தி அம்மன் படம் இப்படித்தான் இருக்கும் என்று அதன் கதையை எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
காமெடி வேடங்களில் நடித்துவந்த ஆர்.ஜே.பாலாஜி, 'எல்கேஜி' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், நாஞ்சித் சம்பத், ஜே.கே.ரித்திஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படம், மூக்குத்தி அம்மன். இதை என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜியும் இயக்குகிறார்.

கன்னியாகுமரி
நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். அவர்தான், மூக்குத்தி அம்மன். மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடிக்கின்றனர். வேல்ஸ், ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது.

நயன்தாரா விரதம்
படத்துக்காக, நயன்தாரா விரதம் இருந்து நடித்தார். படப்பிடிப்பின்போது, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அங்குள்ள சில கோயில்களுக்குச் சென்று வந்தார் நயன்தாரா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
'அம்மன் கேரக்டரில் நடிப்பதற்காக, முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறார். இது, அவர் சினிமா வாழ்வில், முக்கியமான படமாக இருக்கும். அவர் நடிக்கும் கேரக்டர் , படத்துக்கு பெரும் பலமாக இருக்கும்' என்று கூறியிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில், இந்தப் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி டிரெண்டானது.

சாமி படம்
அம்மன் தோற்றத்தில் இருக்கும் நயன்தாராவின் லுக்கை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அதற்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், இது நூறு சதவிகித சாமி படம்தான் என்று தெரிவித்துள்ளார் பாலாஜி. அவர் கூறும்போது, இது நையாண்டி படம் அல்ல. நாம் சின்ன வயதில் பார்த்த, சாமி படங்களின் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும்.

தர்மசங்கடம்
பழைய நினைவுகளின் பயணமாகவும் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துவதாகவும் படம் இருக்கும். இதன் கதையில் நயன்தாரா போன்ற நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் நினைத்தாலும் அவரை மனதில் நினைத்து இதன் கதையை எழுதவில்லை. யாரிடமாவது கதையை சொல்லி அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததால், எனக்கு நெருக்கமாக இருக்கும் நடிகைகளிடம் சொல்லலாம் என்றுதான் தோழி நயன்தாராவிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. படத்தை ஆரம்பித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











