Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
எந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.
சன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.
இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் கொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.
இப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.
ஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.
அதில்,
எந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.
ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.
இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.
இதில், பொள்ளாச்சி ஏடிஎஸ்சி ரூ.40,10 761, திருப்பூர் கே.எஸ். ரூ.10,32,956, கஜலட்சுமி ரூ.28 லட்சம். ராமநாதபுரம் ரமேஷ் ரூ.27,00,016, ராஜபாளையம் ஆனந்த் ரூ.27,98,114, பழனி சினிவள்ளுவர் ரூ.21,83,600 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
இந்த ஆறு பேரைத் தவிர மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் பட நஷ்டம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியிருப்பது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.