மணிரத்னம் மீது மேலும் புகார்கள்.. கமிஷனர் அலுவலகத்துக்குப் படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்!

மணிரத்னம் இயக்கத்தில், அவரது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான படம் கடல். இதனை ஜெமினி நிறுவனம் மொத்தமாக வாங்கி வெளியிட்டது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கில் வெளியானது.
இந்தப் படம் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக, படத்தை விநியோகித்தவர்கள் மணிரத்னம் வீட்டையும் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
ஆனால் மணிரத்னமோ, எனக்கும் கடல் படத்துக்கும் சம்பந்தமில்லை. காரணம், படத்தை நான் மொத்தமாக ஜெமினிக்கு விற்றுவிட்டேன். என லாப நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பு என அறிவித்தார்.
மேலும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் போலீசில் கோரினார்.
இந்த நிலையில், பிரபல விநியோகஸ்தரான மன்னன் பிலிம்ஸ்காரர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடல் படம் மூலம் தங்களுக்கு ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி புகார் கொடுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, இப்போது படத்தை வெளியிட்ட மற்ற ஏரியா விநியோகஸ்தர்களும் புகார் மனுவோடு கமிஷனர் அலுவலகத்துக்கு படையெடுத்துள்ளனர்.
மணிரத்னம்தான் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர். அவரை நம்பித்தான் படம் வாங்கினோம். ஜெமினி நிறுவனத்தை அல்ல. எனவே எங்களுக்கு மணிரத்னம் நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் மணிரத்னம் தரப்போ, 'விநியோகஸ்தர்கள் பணம் கொடுத்தது ஜெமினி நிறுவனத்திடம்தான். கொடுத்த இடத்தில்தானே திருப்பிக் கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு பப்ளிசிட்டிக்காகவும், மிரட்டிப் பார்க்கவும் எங்களை குறிவைப்பது தவறானது. நேர்மையான வியாபாரமும் அல்ல," என்று கடுமையாக கண்டித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











