சர்ச்சைப் பேச்சில் சிக்கிய எம்.எஸ். பாஸ்கருக்கு ஆதரவாக களமிறங்கிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தமிழ் சினிமாவில் தனது முதிர்ச்சியான நடிப்பினால் பாராட்டைக் குவித்தது மட்டும் இல்லாமல், தனக்கான இடத்தினை நிலைப்படுத்திக் கொண்டவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். மொழி படத்தில் நினைவுகளை மறந்த கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தது தொடங்கி தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.
எட்டுத் தோட்டாக்கள் படத்தில் அவர் பேசிய, “ செருப்பாலயே அடிப்பேன் சார்” காட்சி பல ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு அந்த காட்சியை வைத்து வகுப்பு எடுக்கும் அளவிற்கு மிரட்டி விட்டிருப்பார். அண்மையில் வெளியாக வெற்றிப் படமாக உருவாகிய பார்க்கிங் படத்தில் வில்லன் கதாபாத்திரமாக நடித்திருந்தாலும் உண்மையாலுமே படத்தின் கதாநாயகன் அவர்தான் என பலரும் பாராட்டும் அளவிற்கு ஸ்கோர் செய்திருந்தார்.

சர்ச்சைப் பேச்சு: விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தனது உரையில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். அது, ”உங்களுக்கு ஒரு படம் பிடித்திருந்தால் அதனை 4 பேரிடம் கூறுங்கள். அதுவே ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை மற்றவர்களிடம் கூறி படம் பார்க்கச் செல்பவர்களைத் தடுக்காதீர்கள். எல்லாரும் படம் பார்க்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் 120 ரூபாயில் மாளிகை கட்டப்போவதில்லை. அனைவரும் வந்து படங்கள் பார்த்தால் பல குடும்பங்கள் வாழும் என்பதை மறந்து விடாதீர்கள” என்பது தான். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கமெண்டுகளில் ரசிகர்கள் பாஸ்கரை வன்மையாக கண்டித்து பதிவிட்டு வந்தனர்.
ஈக்கு தலையாக இருக்க: இந்த பேச்சின்போது, “ நான் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கத் தயாராகத்தான் இருக்கின்றேன். ஆனால் அவர்கள் தான் என்னை அவர்களது படங்களில் சேர்த்துக் கொள்வதில்லை. அதற்கான காரணமும் எனக்குத் தெரியவில்லை. இதுமட்டும் இல்லாமல், அவர்கள் கூப்பிட்டால் கட்டாயம் நடிப்பேன். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கின்றேன், சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விடவும் ஈக்கு தலையாக இருக்கவே நான் விரும்புகின்றேன்” என பேசியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு: இவரது இந்த பேச்சினை மேற்கோள் காட்டி பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் பக்கத்தில், ”பெரிய நடிகர்களுடன் நடித்தால் இவர் அதிகம் ஸ்கோர் செய்து விடுவார் என்பதால் அழைப்பது இல்லையா அல்லது வேறு காரணமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த கேள்வி சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. மேலும், ப்ளூ சட்டை மாறன் கூறுவது உண்மைதானோ எனவும், அதனால் தான் பெரிய நட்சத்திரங்கள் எம்.எஸ். பாஸ்கரை தங்களுடைய படத்தில் சேர்ப்பதில்லையோ எனவும் பேசி வருகின்றனர். இதனை உணர்ந்த எம்.எஸ். பாஸ்கர் அதனால் தான் தனது பேச்சில், சிங்கத்திற்கு வாலாக இருப்பதைக் காட்டிலும் ஈக்கு தலையாக இருக்கவே நான் விரும்புகின்றேன் என பேசியுள்ளார் எனவும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











