Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பட்டுக்கோட்டையாரின் இடம் தமிழ் சினிமாவில் இன்னும் காலியாகத்தான் உள்ளது! - இளையராஜா
சென்னை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் இன்னும் தமிழ் சினிமாவில் காலியாகத்தான் உள்ளது என்றார் இசைஞானி இளையராஜா.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கையை இரண்டரை மணிநேர ஆவணப் படமாக எடுத்துள்ளார் சாரோன் புஷ்பராஜ் என்பவர்.
இந்த விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, ஆவணப் படத்தை வெளியிட்டனர்.
விழாவில் பேசிய இளையராஜா, "அண்ணன் எம்எஸ்வி இசையில்தான் முதல் முதலாக பாசவலை படத்தில் பாடல் எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
அவரிடம் பாடலுக்கு இசையமைத்ததை, இருவரின் அனுபவங்களை அண்ணன் வாயால் சொல்லக் கேட்க வேண்டும் என்ற ஆவலில்தான் நான் வந்தேன். ஆனால் அவர் நன்றி வணக்கம் என முடித்துக் கொண்டார்.
அவர்களின் பாடல்களைக் கேட்டு ரசித்தவனாகிய நான் இப்போது அவரைப் பற்றிப் பேசுவதை என்னவென்பது.
குட்டியாடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா குறவனுக்கு சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்!
அண்ணன் சிவாஜி நடித்த 'பாசவலை (1956)' படத்தில் அண்ணன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய முதல் பாட்டு இதுதான். என்ன ஒரு மொழிநடை, சொல்வளம்...
அவரது பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய மொழி, நடை, சிந்தனை, சொல்லோட்டம், தெளிந்த நீரோடையைப் போன்ற நடை இருக்கிறதே, அந்த இடம் இன்றுவரை திரைத் துறையில் காலியாகத்தான் இருக்கிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டெழுத வந்த காலத்தில் உடுமலை நாராயணகவி இருந்தார். பாபனாசம் சிவன் பல பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். இன்னும் தஞ்சை ராமைய்யாதாஸ், கே.டி.சந்தானம் போன்ற பல பாடலாசிரியர்கள் இருந்தார்கள். கவியரசராய் கண்ணதாசன் வலம் வந்துகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பட்டுக்கோட்டையார் வந்து தன் எளிய சொற்களால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர். பரத நாட்டிய பாடல்களை அவர் எழுதினாலும் அந்த மொழியில் வளம் சிறப்பாக இருக்கும். அதே போன்று சின்ன பயலே... சின்ன பயலே... சேதிகேளடா, தூங்காதே தம்பி தூங்காதே என எளிய நடையில் அவர் எழுதிய பல பாடல்களை நான் ரசித்திருக்கிறேன்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாண்டித்தேவன் படத்தில் வரும், தேனாறும் பாயுது... செங்கதிரும் சாயுது... ஆனாலும் மக்கள் வயறு காயுது... என்ற பாடலை நான் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். பட்டுக்கோட்டையின் ரசிகனாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இயக்குனர் சாரோன் ஏழுவருடம் உழைத்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் வாழ்க என்று வாழ்த்துகிறேன்,' என்றார்.