ராமாயணம், மகாபாரதத்தைத் தொடர்ந்து இந்ததொடரும் வருதாம்ல.. கன்பர்ம் பண்ணிட்டாரே அந்த சூப்பர் ஹீரோ!
மும்பை: குழந்தைகள் ரசித்துக் கொண்டாடிய, சக்திமான் தொடர் விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கிறது என்று நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராமாயணத் தொடர்
இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நாட்களில் ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடர் மற்றும் பி.ஆர்.சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடர்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

நண்பகலில் மகாபாரதம்
அதன்படி 28- ஆம் தேதி முதல் ராமாயணம் தொடர் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் மகாபாரதம் தொடர் நண்பகலில் ஒளிபரப்பாகிறது. ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடர் 1987 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் இந்தத் தொடரைப் அப்போது பார்த்ததாகக் கூறப்பட்டது.
சக்திமான்
இந்நிலையில், குழந்தைகள் ரசித்துக் கொண்டாடிய, சக்திமான் தொடரும் மீண்டும் ஒளிபரப்பாக இருப்பதாகக் கூறப்பட்டது. 1997 முதல் 2005- ஆம் ஆண்டு வரை சுமார் 520 நாட்கள் ஒளிபரப்பாகி வரவேற்பு பெற்ற தொடர் இது. இந்நிலையில் இந்தத் தொடரின் நாயகனும், தயாரிப்பாளருமான முகேஷ் கண்ணா, இந்த தொடர் விரைவில் வெளியாகும் என்று ட்விட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் விரைவில் சக்திமான் ஒளிபரப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











