மத மோதலை தூண்டும் விதமாக கருத்து.. நடிகை கங்கனா, அவர் சகோதரி மீது வழக்குப் பதிவு!
மும்பை: மத மோதலை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாக, நடிகை கங்கனா ரனவத் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, நடிகை கங்கனா இந்தி திரையுலகம் மீது பல குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்.

கடுமையான புகார்கள்
பாலிவுட் பிரபலங்கள், கரண் ஜோஹர், மகேஷ் பட் உள்பட பலர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேட்டிகளிலும் கடுமையான புகார்களை கூறி வரும் அவர், மும்பையை, அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மோதலை தூண்டிவிடும்
வேளாண் மசோதாவை எதிர்த்து போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் எனவும் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கங்கனாவும் அவர் சகோதரி ரங்கோலியும் இரு மதத்தினர் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கலைஞரின் மனதை
இதுகுறித்து மும்பையை சேர்ந்த சாகில் அஷ்ரப் அலி என்பவர், பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி தெரிவித்த கருத்துகள் அவரது மத உணர்வுகளை புண்படுத்தியது மட்டுமில்லாமல், பல கலைஞரின் மனதையும் காயப்படுத்தியதாகக் தெரிவித்து இருந்தார்.

மோதலை தூண்டும்
இதேபோல நடிகையின் சகோதரி இரு மதத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து கூறியதாகவும் கூறி இருந்தார். கங்கனாவின் ட்விட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











