ஷாரூக்கான், ஆமிர்கானுக்கெல்லாம் இனி 2 "பி.சி" போதும்! - மகா. அரசு முடிவு
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரபல இந்தி நடிகர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. சிலருக்கு முற்றிலும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்தி நடிகர்-நடிகைகளில் சுமார் 40 பேருக்கு மும்பை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய்குமார் உள்பட 15 பேருக்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் இருவரும் இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து விட்டதாக சர்ச்சையை உருவாக்கி விட்டனர்.

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
இதனால் அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மிரட்டல் விடுத்தன. இதைத் தொடர்ந்து நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் இருவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

15 பேருக்கு பாதுகாப்பு வாபஸ்
இந்த நிலையில் மும்பை போலீசார், பாலிவுட் நடிகர்- நடிகைகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்தனர். அப்போது படத் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, இயக்குனர்கள் ராஜ்குமார் ஹரிணி, பர்காகான் உள்பட 15 பேரின் பாதுகாப்பு முழுமையாக திரும்பப்பெறப்பட்டது.

ஆமிர், ஷாரூக்கு 2 போலீஸ் போதும்...
நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் ஆகியோருக்கு பாதுகாப்பை குறைக்க முடிவு செய்தனர். அதன்படி இனி ஷாருக்கான், அமீர்கான் இருவருக்கும் தலா 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப்
இன்கிரிடபிள் இந்தியா திட்டத்தின் விளம்பரத் தூதராக இதுவரை நடிகர் அமீர்கான் இருந்தார். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் இந்தியாவின் விளம்பரத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











