செக்ஸ் புகார்: வாக்கு மூலம் தர வருமாறு ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்
மும்பை: தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது செக்ஸ் தொந்தரவு புகார் கொடுத்துள்ள நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் வாங்கத் தயாராகிறது மும்பை போலீஸ்.
பிரபல தொழில் அதிபர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர், தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது சமீபத்தில் பாலியல் புகார் கொடுத்தார் நடிகை பிரீத்தி ஜிந்தா.
புகார் கொடுத்த கையோடு அவர் வெளிநாடு சென்றதால், அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை. இதனால் 3 நாட்களில் தங்களது முன்பு ஆஜராகி வாக்குமூலம் தரும்படி பிரீத்தி ஜிந்தாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கணவன் - மனைவியாக
இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தாவும், பாம்பே டையிங் அதிபர் நெஸ் வாடியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கணவர்-மனைவி போல பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 5 ஆண்டு காலம் கிட்டத்தட்ட ஒன்றாக வாழ்ந்த அவர்கள் உறவு கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது.

வர்த்தக உறவு
ஆனால் அவர்களது வர்த்தக உறவு நீடித்தது. இருவரும் ஐ.பி.எல். போட்டி அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களாக தொடர்கின்றனர். இந்த அணி பங்கேற்கும் போட்டிகளில் இணைந்தே கலந்து கொள்கின்றனர்.

செக்ஸ் புகார்
இந்த நிலையில் நடிகை பரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், தனது தொழில் பங்குதாரருமான நெஸ் வாடியா மீது மும்பை மெரின் டிரைவ் போலீசில் பரபரப்பு பாலியல் புகாரை அளித்தார். கடந்த மே மாதம் 30-ந் தேதி வான்கடே மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடந்த ஆட்டத்தின்போது தன்னை அவர் மானபங்கபடுத்தி, மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்தார். அதன் பேரில் மானபங்கபடுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் தொழில் அதிபர் நெஸ் வாடியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணை
இந்த வழக்கில், வான்கடே மைதானத்தில் பிரீத்தி ஜிந்தா- நெஸ் வாடியா ஆகியோரின் அருகில் இருந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தனர். இந்த நிலையில் பரபரப்பு புகார் கொடுத்த பிரீத்தி ஜிந்தாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற முயற்சித்தனர்.

வெளிநாடு பறந்த ப்ரீத்தி
ஆனால் அவர் வெளிநாடு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் அவரிடம் போலீசாரால் வாக்குமூலம் பெறமுடியவில்லை. அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சம்மன்
இதனால் நேற்று போலீசார் நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு அவரது வக்கீல் தேஷ் ஜெயின் மூலம் சம்மன் ஒன்றை கொடுத்து அனுப்பினர். அதில், பிரீத்தி ஜிந்தா 3 நாட்களுக்குள் போலீசில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி
இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரீத்தி ஜிந்தா புகார் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கும் முன், அது தொடர்பான சில கூடுதல் தகவல்களை அவரிடம் கேட்டு பெற விரும்புகிறோம். அவர் தற்போது இந்தியாவில் இல்லை என தெரியவந்து உள்ளதால் அவரது வக்கீலிடம் கடிதம் கொடுத்து இருக்கிறோம் அதில் 3 தினங்களுக்குள் அல்லது இந்த வார இறுதிக்குள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு பிரீத்தி ஜிந்தாவை கேட்டுக்கொண்டு உள்ளோம்.

வீடியோ ஆதாரம் ஏதுமில்லை
தான் தனது இருக்கையில் சென்று அமர்ந்தபோது நெஸ் வாடியா அருகே வந்து பலர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக பிரீத்தி ஜிந்தா கூறி இருக்கிறார். அந்த சமயத்தில் மைதானத்தில் எந்த இடத்தில் அவர் அமர்ந்து இருந்தார், அப்போது யார்-யார் அவரது அருகே இருந்தார்கள் என்ற விவரம் எங்களுக்கு தெரிய வேண்டும்.
இதுவரை எங்களுக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களை நாங்கள் ஆய்வு செய்த போது, அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் பற்றிய தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே வரும் நாட்களில் மேலும் சில வீடியோ பதிவு ஆதாரங்களை கேட்டுப்பெற இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











