ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? டி.வி. நடிகைக்கு நடுரோட்டில் தொந்தரவு கொடுத்த ஆசாமி
மும்பை: மும்பையில் பிரபல டிவி நடிகைக்கு நடு ரோட்டில் காரில் வந்த ஆசாமி தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு தொந்தரவு கொடுத்த நபரைப் பற்றி ஃபேஸ்புக்கில் போட்டு பிரச்சினையை கொட்டி தீர்த்துள்ளார் அந்த நடிகை.
மும்பை பைசுல்லா பகுதியில் வசித்து வரும் தொலைக்காட்சி நடிகை அலெபியா கபாடியா(28), சனிக்கிழமை மாலை பந்த்ரா குர்லா காம்ப்ளச்சில் இருந்து வீட்டிற்கு தனது குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். உடன் அவரது தோழியும் சென்றார். தாராவி வழியாக அவர் சென்றபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் கார் ஜன்னல் கண்ணாடிகளை கபாடியா இறக்கி விட்டார். அப்போது ஒரு சொகுசு காரில் வந்த நபர், கபாடியாவின் காரின் அருகே தனது காரை உரசியபடி நிறுத்தினான். பின்னர், அந்த நபர் கபாடியாவிடம், நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? நான் உங்களுடன் பேஸ்புக் நண்பராகலாமா? என்று கேட்டு நச்சரித்துள்ளார்.

கபாடியா மறுத்தபோதும் விடாமல் அவருடன் பேச விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார். இதனால் அவரை போட்டோ எடுத்த கபாடியா, பேசாமல் சென்றுவிடும்படி கூறியுள்ளார். இந்த மிரட்டலுக்கும் பயப்படாத அந்த நபர் மீண்டும் தொந்தரவு கொடுத்தார். பின்னர் அவர் தனது செல்போனை எடுத்து உதவிக்கு சிலரை அழைத்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து சாகு நகர் காவல் நிலையத்தில் கபாடியா புகார் அளித்தார். மேலும் தனக்கு தொந்தரவு கொடுத்த நபரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, தான் சந்தித்த பிரச்சினை குறித்து விவரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











