கத்தி கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது - ஏ ஆர் முருகதாஸ்
கத்தி படத்தின் கதையை நீதிமன்றம் நியமித்துள்ள அட்வகேட் கமிஷனரிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறி, வழக்குத் தொடர்ந்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி' படத்தின் கதை மீது உரிமை கோரி மீஞ்சூர் கோபி என்பவர் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு பற்றி விசாரித்து உண்மை நிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் சங்கரை நீதிமன்றம் நியமித்துள்ளது. 'மீஞ்சூர் கோபியும், ஏ.ஆர்.முருகதாஸும் தங்களது கதையின் நகலை இவரிடம் கொடுக்க வேண்டும். இரண்டும் ஒரே கதையா என்பதை வழக்கறிஞர் சங்கர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி மீஞ்சூர் கோபி தன் கதையின் நகலை அட்வகேட் கமிஷனர் சங்கரிடம் சமர்ப்பித்துவிட்டார். ஏ.ஆர். முருகதாஸோ இன்னமும் கதையின் நகலைக் கொடுக்கவில்லை.
மாறாக, "இந்த வழக்கில் அட்வகேட் கமிஷனரை நீதிமன்றம் நியமித்ததை ரத்து செய்ய வேண்டும்" கோரியுள்ளார்.
மேலும் தான் இதுவரை கோபியை சந்தித்ததே இல்லை. அவரிடம் எந்தக் கதையையும் கேட்கவில்லை. அதோடு, கதையின் நகலை இப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் வழக்கு விவகாரமும், கதையில் உள்ள முக்கியமான அம்சங்களும் வெளியில் கசிந்துவிடும். அதனால் 'கத்தி' திரைப்படத்தின் வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகும், என்று பதில் மனுதாக்கல் செய்துள்ளார் முருகதாஸ்.


Click it and Unblock the Notifications











