திக்கித் தெணறுது தேவதை...- 'உ' பட பாடலாசிரியர் முருகன் மந்திரத்தின் அனுபவங்கள்!
உ... இப்படி ஒரு தலைப்பில் இன்று ஒரு படம் வெளியாகிறது.
அந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதியவர் முருகன் மந்திரம். குறிப்பாக 'திக்கித் தெணறுது தேவதை...' பாட்டுக்கு ஏக வரவேற்பு.
இந்தப் படத்துக்குப் பாட்டெழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட முருகன் மந்திரம் கூறுகையில், "உ" படத்தில் நான் எழுதி உள்ள "திக்கித் தெணறுது தேவதை" பாடல் பெரிய அளவில் மக்களிடம் போய்ச்சேர்ந்திருக்கிறது. இந்த பாடலை யூடியூபில் 3 இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இயக்குநர் ஆஷிக்
"உ" படத்தின் பாடல்களை பொறுத்தவரை இயக்குநர் ஆஷிக் எனக்கு அளித்த சுதந்திரம், மற்றும் இசையமைப்பாளர் அபிஜித் இராமசுவாமியின் அழகான மெட்டுக்களும் பாடல்கள் பெரிதும் பேசப்பட முக்கிய காரணங்களாக அமைந்தது என்று நான் உறுதியாக கூறுவேன்.
பாடல் வரிகளை இப்படி வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் ஆஷிக் இடம் ஒவ்வொரு பாடலுக்காகவும் நான் பேசும்போது எந்த மாற்றுக் கருத்தும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். அதனால் தான், "திக்கித் தெணறுது தேவதை", "ஒரு படி மேல", "காலின் கீழே வானம்", "ஆஹா இது சினிமா" என ஒவ்வொரு பாடலின் பல்லவியும் அழகாக அமைந்தது. அதற்காக இயக்குநர் ஆஷிக்கிற்கு எப்போதும் என் நன்றிகள்.

தம்பி ராமையா பாட்டு
ஒவ்வொரு பாடலின் உருவாக்கத்திற்கு பின்னாலும் கண்டிப்பாக சில கதைகள் இருக்கும். உ படத்தில் தம்பி ராமையா சாரை பாடவைக்க வேண்டும் என்று இயக்குநர் ஆஷிக் மற்றும் இசையமைப்பாளர் முடிவு செய்த பின் ஒருநாள் மாலை எனக்கு அந்த பாடலின் மெட்டை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தனர். மெட்டு மிகவும் சிறியதாக ஒரு பல்லவி அளவுக்கு மட்டுமே இருந்தது. அதுபற்றி நான் கேட்டபோது இது பெரிய பாட்டு இல்ல, படத்தில் ஒரு இடத்தின் பின்னணி இசைக்கு பதிலாக இந்த பாட்டை பயன்படுத்தபோறோம் என்று சொன்னார்கள்.

ஒருபடி மேலே
மறுநாள் காலை 10 மணிக்கு பாடல் பதிவு என்று சொன்னார்கள். நான் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, இயக்குநர் ஆஷிக்கிடம், தம்பி ராமையா சார் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக இருக்கிறார். அவர் முதன்முதலாக பாடகராக அறிமுகமாவது என்பது தமிழ்சினிமாவில் ஒரு பதிவு. அந்தப் பாடல் துண்டுப் பாடலாக அமைந்து விட்டால், ரேடியோ மற்றும் தொலைக் காட்சிகளில் இடம் பெறாது, மக்களிடமும் போய்ச் சேராது என்றேன்.

ஒரே இரவில்
அதனால் ஒரு பல்லவி, ஒரு சரணம் என்ற அளவில் பாடலை முழுப் பாடலாக மாற்றலாம் என்றேன். அதன்பின் இசையமைப்பாளரிடம் சரணம் மெட்டு போடச்சொல்லி கேட்டோம். இரவு 10 மணி சுமாருக்கு சரணத்திற்கான மெட்டை எனக்கு மெயில் அனுப்பினார் இசையமைப்பாளர். அதன்பின் இரவில் அந்த பாடலுக்காக 3 சரணங்கள் எழுதி அதில் ஒன்றை பயன்படுத்தினோம். காலையில் பாடல் பதிவு முடிந்து கேட்டபோது மிக அழகாக வந்திருந்தது. "ஒரு படி மேல" என்று தொடங்கும் அந்த பாடலும் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் மட்டுமல்ல, நெருக்கமான வரிகளும் கூட.

மறக்க முடியாத அனுபவம்
படத்தின் பாடல்கள் எழுதியது மறக்கமுடியாத அனுபவம். கதைக்கரு பற்றிய ஒரு சிறுபொறி மட்டும் இயக்குநர் ஆஷிக்கிடம் நான் சொன்னேன். தவிர்க்க முடியாத காரணங்களால் திரைக்கதை வசனம் போன்ற பணிகளில் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை என்பது எனக்கு பெரிய வருத்தமே. மற்றபடி படத்தின் திரைக்கதை வசனங்கள் எல்லாமே முழுக்க முழுக்க இயக்குநர் ஆஷிக்கின் கற்பனை, உழைப்பு.


Click it and Unblock the Notifications











