பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த மியூசிக் அகெடமி!
பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்கள் மீது மியூசிக் அகெடமி நடவடிக்கை எடுத்துள்ளது
Recommended Video

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக இசைப் பாடகர்கள் மீது மியூசிக் அகெடமி நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகெங்கும் எல்லா திரைகளிலும் வண்ணக் கோலங்கள் படைப்பது உங்கள் மீடூ. என்று விளம்பரம் செய்யாத குறையாக மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.

கவிஞர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் என எழுந்த புகார் கர்நாடக சங்கீத உலகத்தையும் ஒரு உலுக்கு உலுக்கியது. சில சங்கீத வித்வான்கள் மீதும் பாடகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், பாலியல் புகாரில் அகப்பட்ட கர்நாடக சங்கீத கலைஞர்கள் ஏழுபேர் மீது மெட்ராஸ் மியூசிக் அகெடமி நடவடிக்கை எடுத்துள்ளது. பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்களான, என்.ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர்.ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் இனிமேல் மியூசிக் அகெடமியில் பாட முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகெடமி தலைவர் என்.முரளி தெரிவித்துள்ளார். கர்நாடக சங்கீத உலகில் இது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மார்கழி மகா உட்சவத்தில் மியூசிக் அகெடமியில் பாடுவதென்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்குள்ள விதிளை பின்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளதால் அகெடமிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











