மணிரத்னத்தின் 'ரோஜாவில்' மலர்ந்து இசையுலகின் ராஜாவான ஏ.ஆர். ரகுமான்!
சென்னை: இன்று உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமான போது அவரின் வயது 25.
அறிமுகமான முதல் படத்தில் தேசிய விருது வாங்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? ஆனால் அந்தப் பாக்கியம் ரகுமானுக்கு கிடைத்தது.
ரோஜாவில் ஆரம்பித்த அவரது பயணம் பல்வேறு சாதனைகளையும் தாண்டி இன்று ஷங்கரின் 2.0வில் வந்து நிற்கிறது.

ரோஜா
1987 ம் ஆண்டே தனது இசைப்பயணத்தை ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி விட்டபோதும் முதன்முதலாக ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு 1992 ல் தான் அவருக்கு கிடைத்தது. இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது போன்றவற்றை வாங்கிய இசையமைப்பாளர் அநேகமாக ரகுமானாகத் தான் இருப்பார். டைம் பத்திரிகையின் எப்போதும் சிறந்த சிறந்த 10 ஒலிப்பதிவுகள் வரிசையில் ரோஜாவிற்கும் ஒரு இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஜென்டில்மேன்
ஜென்டில்மேன், காதலன், திருடா திருடா, மின்சாரக் கனவு, பம்பாய், இந்திரா, டூயட், இந்தியன், காதலர் தினம், உயிரே, அலைபாயுதே இந்தப் படங்களின் பாடல்களை வைத்துத் தான் அவரது ரசிகர்கள் ரகுமானிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறுகின்றனர். அந்தளவிற்கு காலத்தால் அழியாத பாடல்களை தனது இசையின் மூலம் தமிழர்களின் நெஞ்சில் விதைத்திருக்கிறார் ஏ.ஆர்.

மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் சினிமாவின் சிறந்த கூட்டணி என்று இந்த இருவரையும் தாரளாமாக சொல்லலாம். ரோஜாவில் ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று ஓ காதல் கண்மணி வரை தொடர்கிறது. ரோஜா, இருவர், பம்பாய் ,அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி என்று இருவரும் பணிபுரிந்த எல்லாப் படங்களிலும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதில் பம்பாய் திரைப்படத்தின் ஒலிப்பதிவு 12 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் - ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் சினிமாவின் சிறந்த கூட்டணிகளில் ஷங்கர் - ஏ.ஆர். ரகுமானிற்கு ஒரு தனியிடம் உண்டு. எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த ஷங்கர் தனது முதல் படமான ஜென்டில்மேனிற்கு ஒரு இசையமைப்பாளரைத் தேடியபோது ரோஜா படத்தின் 'சின்ன சின்ன ஆசை' பாடலை டிவியில் பார்த்திருக்கிறார். அன்று ஜென்டில்மேனில் தொடங்கிய இந்தக் கூட்டணி இன்று 2.0 வரை சுமார் 20 வருடங்களாகத் தொடர்கிறது.(இடையில் அந்நியன், நண்பன் போன்ற படங்களுக்கு மட்டும் ரகுமான் இசையமைக்கவில்லை)

2 ஆஸ்கர் விருதுகள்
தான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று புதிய சாதனை படைத்தார். அந்த மேடையில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று ரகுமான் உச்சரித்த வார்த்தைகள் தமிழை ஒருமுறை உலகளவில் உயர்த்திப் பிடிக்க காரணமாகின.

24 வருடங்களில்
இசையமைக்க வந்த 24 வருடங்களில் 4 தேசிய விருதுகள்(ரோஜா, மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால்) 2 ஆஸ்கர் விருதுகள் உட்பட மொத்தம் இதுவரை 125 விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

நெஞ்சே எழு
சென்னை மக்களைப் பாதித்த மழை, வெள்ளத்தில் இருந்து அவர்களை மீண்டும் எழவைக்க நெஞ்சே எழு என்ற பெயரில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஜனவரி 16 மற்றும் 23 ம் தேதிகளில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான்.

மீண்டும் தமிழில்
சில ஆண்டுகளாக நிறையத் தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும் அந்தக் குறையை நிவர்த்தி செய்வது போல இந்த வருடத்தில் அதிகப் படங்களுக்கு இசையமைக்கிறார். அச்சம் என்பது மடமையடா,24, எந்திரன் 2.0 போன்ற படங்களில் மீண்டும் இவரது இசையை நாம் கேட்டு மகிழலாம்.
பணம்,புகழுக்காக இல்லாமல் மனதுக்கு நிறைவான படங்களை தேர்ந்தெடுத்து இசையமைப்பதில் தற்போது அதிக கவனம் செலுத்தி வரும் ரகுமான் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து தமிழுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தட்ஸ்தமிழ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











