AR Rahman: சில கற்றார் பேச்சும் இனிமையே.. இளையராஜாவை சீண்டினாரா ஏ ஆர் ரஹ்மான்?
சென்னை: தொடர்ந்து இளையராஜா விவகாரம் கோலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தன்னுடைய பாடல்களுக்கு காப்பி ரைட் கேட்டு அவர் வழக்கு தொடர்ந்துவரும் சூழலில் இதற்கு பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்துவும் பாடலுக்கு மொழி முக்கியமா இசை முக்கியமா என்பது குறித்து பேசியிருந்தார்.
இதையடுத்து பொங்கி எழுந்துவிட்டார் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். வைரமுத்துவை நேரடியாகவே எச்சரித்திருந்தார். இந்த விவகாரத்தில் வைரமுத்துவிற்கு ஆதரவாக கோலிவுட்டில் பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இந்த விவகாரத்தில் தற்போது தன்னுடைய கருத்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இசைஞானி இளையராஜா: தன்னுடைய பாடல்களுக்கு காப்பி ரைட் கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார் இசைஞானி இளையராஜா. இது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். பாடலுக்கு மொழி பெரியதா இசை பெரியதா என்ற விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. வைரமுத்து இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூழலில் இதுகுறித்து கங்கை அமரன் மிரட்டலாக பேசியது பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து குயில் கூவத் துவங்கினால், காடு தன்னுடைய உரையாடலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதும் சர்ச்சைகளை தொடர்ந்தது.
சன் பிக்சர்சுக்கு நோட்டீஸ்: பாடல்களை தயாரிப்பாளருக்கு இளையராஜா விற்று விட்டதால் அவற்றை உரிமை கோர முடியாது என்று ஆடியோ நிறுவனங்களும் வழக்கு தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் -அனிருத் கூட்டணியில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இதில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் பயன்படுத்தப்பட்ட சூழலில் அதற்கான முறையான அனுமதி பெறப்படவில்லை என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதையும் பார்க்க முடிந்தது.
சட்டம் என்ன சொல்கிறது?: இதே போல லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ஃபைட் கிளப் படத்தில் என் ஜோடி மஞ்ச குருவி என்ற பாடலும் பயன்படுத்தப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போல விக்ரம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடலுக்கும் அனுமதி பெறவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் ஒரு படத்தின் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளரிடம் இருக்கும் என்றும் ஆனால் அந்த படத்தின் பாடல்கள் குறித்த காப்புரிமை படத்தின் இசையமைப்பாளரிடம் தான் இருப்பதாக நமது சட்டம் சொல்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ஏஆர் ரஹ்மான் பதிவு: ஒரு படத்தின் உரிமையை தயாரிப்பாளரிடம் வாங்கியிருந்தால் ஒட்டுமொத்த படத்தையும் போடுங்கள், ஆனால் பாடலை தனியாக எடுத்துப் போட வேண்டும் என்றால் அதற்கான உரிமம் இசையமைப்பாளரிடம் தான் இருக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது ஏ ஆர் ரகுமான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு விமர்சனங்களை மீண்டும் கிளப்பியுள்ளது. சில கற்றார் பேச்சும் இனிமையே என்று தன்னுடைய பதிவில் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து முன்னதாக அளித்திருந்த பேட்டியை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இளையராஜாவை சீண்டிய ஏஆர் ரஹ்மான்?: குமரிமுத்து அந்த பேட்டியில் நாலடியார் பாடல் ஒன்றை வைத்து தான் அதிகமாக கற்றவன் என்று பெருமை கொள்ள வேண்டாம் என்றும் சில நூல்களை மட்டுமே கற்றவர்களும் அதிகமாக படித்தவர்களுக்கு அச்சாணியாக இருப்பதை பார்க்க முடிவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஏஆர் ரஹ்மான், சில கற்றார் பேச்சும் இனிமையே என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் மறைமுகமாக இளையராஜாவை சாடியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











