Bhavatharini death: அன்பு மகளே.. உடைந்துப் போய் பதிவிட்ட இசைஞானி இளையராஜா!
சென்னை: இசைஞானி என்று அனைவராலும் போற்றப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1000க்கும் மேற்பட்ட படங்களில் இவரது பாடல்கள் அமைந்துள்ளன. அவை அனைத்திலும் தன்னுடைய சிறப்பான தனித்துவத்தை பங்களிப்பை கொடுத்து வருகிறார் இளையராஜா. இவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் சிறந்த இசையமைப்பாளராக வலம்வந்துக் கொண்டிருக்கின்றனர். இவரது மகள் பவதாரிணியும் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வருகிறார். பின்னணி பாடகியாக தன்னுடைய பயணத்தை துவங்கிய பவதாரிணி, தொடர்ந்து இசையமைப்பாளராகவும் சிறப்பான படங்களில் பணியாற்றியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, நேற்றைய தினம் சிகிச்சை பலனளிக்காமல் இலங்கையில் உயிரிழந்தார். இவரது உடல் தற்போது விமானம் மூலம் சென்னை எடுத்துவரப்பட்டுள்ளது. இங்கு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரியில் அவரது அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பான வாய்சிற்கு சொந்தக்காரரான பவதாரிணி அதிகமாக இல்லையென்றாலும் சிறப்பான பல பாடல்களை தன்னுடைய அப்பா, சகோதரர்கள், தேவா, சிற்பி உள்ளிட்டவர்கள் இசையில் பாடியுள்ளார்.

பின்னணி பாடகி பவதாரிணி: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி இசைஞானி இளையராஜாவின் மகளாக சினிமாவில் பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1984ம் ஆண்டில் ராசய்யா என்ற படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடி சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் பவதாரிணி. பல படங்களில் இவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும்வகையில் அமைந்திருந்தன. தமிழில் தன்னுடைய தந்தை இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா இசையில் பல பாடல்களை பாடியுள்ளார் பவதாரிணி.மேலும் தேவா, சிற்பி இசையமைப்பிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
பின்னணி பாடகி -இசையமைப்பாளர்: மேலும் ரேவதியின் மித்ர மை பிரெண்ட் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் இசையமைத்துள்ளார் பவதாரிணி. திருமணமாகி செட்டில் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. அவரது கணவர் ஓட்டல் பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பவதாரிணி பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இலங்கையில் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிப்பதற்காக குடும்பத்தினர் அவரை கொண்டு சென்றுள்ளனர்.
பவதாரிணி மரணம்: இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இலங்கையில் பவதாரிணி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கையில் இருந்து பவதாரிணியின் உடல் தற்போது சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மகளின் மரணம் இளையராஜாவை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பவதாரிணியின் மரணத்தின்போது இளையராஜாவும் இலங்கையில் தான் இருந்தார். இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் இலங்கை சென்றது குறிப்பிடத்தக்கது.
அன்பு மகளே என இளையராஜா உருக்கம்: இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்த பவதாரிணி, தன்னுடைய இறுதி நாட்களில் தன்னுடைய அப்பாவை நேரில் பார்க்க கார்மூலம் அவரது இருப்பிடத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளையராஜா, அவரை பார்க்க தான் வருவதாக கூறி, அவரை திரும்ப மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இத்தகைய அழகான அப்பா -மகள் உறவை கொண்ட இளையராஜாவிற்கு பவதாரிணியின் மரணம் பேரிடியாக இறங்கியுள்ளது. தற்போது தன்னுடைய மகளின் இறப்பை நினைத்து எக்ஸ் தளத்தில் தன்னுடைய மகளுடன் தான் இருக்கும்படியான சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ள இளையராஜா, அன்பு மகளே என்று உருக்கம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











