Ilaiyaraaja: எனக்கு நான் பொய்யாக இருக்க விரும்பவில்லை.. வெளிப்படையாக பேசிய இசைஞானி!
சென்னை: இசைஞானி, மேஸ்ட்ரோ என்று தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. தமிழில் அன்னக்கிளி படம் மூலம் பஞ்சு அருணாசலத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இளையராஜாவிற்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றியாகவே அமைந்தன. அவரது பாடல்களுக்காகவே ஓடி வெற்றிகளை குவித்த படங்கள் அதிகம். தன்னுடைய 47 வருட திரைத்துறை பயணங்களில் பல வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுத்து அதை சக்சஸாகவும் மாற்றியுள்ளார். பல பாடகர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.
ஏறக்குறைய தன்னுடைய அரை நூற்றாண்டு சினிமா பயணத்தை மக்களுக்கு காட்சிப்படுத்த தயாராகியுள்ளார் இசைஞானி இளையராஜா. அவரது பயோபிக் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இளையராஜா மட்டுமில்லாமல் அவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவும் சிறப்பான இசையமைப்பாளர்களாக உள்ளனர். சமீபத்தில் மறைந்த அவரது மகள் பவதாரிணியும் பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா: இசைஞானியாக கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது இசையமைப்பில் 1500க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. ராசையா என்ற தன்னுடைய இயற்பெயரை சினிமாவிற்காக இளையராஜா என்று மாற்றிக் கொண்டவர். இவர் அன்னக்கிளி படம் கடந்த 1976ம் ஆண்டில் இசை தயாரிப்பாளராக, தயாரிப்பாளர் பஞ்ச அருணாசலத்தால் அறிமுகம் செய்யப்பட்டார். முன்னதாக தமிழ் படங்களில் இசையமைக்கும் ஆர்வத்தில் தன்னுடைய ஹார்மோனிய பெட்டியுடன் சொந்த ஊரான பண்ணைபுரத்திலிருந்து சென்னை வந்த இளையராஜாவிற்கு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமா கொடுத்துள்ளது.
இளையராஜா இசைப்பயணம்: பாட்டு கேட்பதற்காக தான் வாங்கி இருந்த ரேடியோவை விற்றுவிட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தில் இளையராஜா தன் சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரன் உள்ளிட்டவர்களுடன் சென்னைக்கு ரயில் ஏறினார். தன்னுடைய நண்பனான பாரதிராஜாவின் இருப்பிடத்திற்கு வந்து சாய் லாட்ஜில் தங்கியிருந்தார். ஒரு கட்டத்தில் அங்கேயே தங்கியிருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் இசை நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.ஓ நெஞ்சமே என்ற நாடகத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் அன்னக்கிளி பட கதாசிரியர் செல்வராஜின் நட்பு கிடைத்து. அதன்மூலம் அன்னக்கிளி படத்தில் இசையமைக்கும் வாய்ப்பையும் இளையராஜா பெற்றார்.
அன்னக்கிளி பட வாய்ப்பு: தன்னுடைய 33வது வயதில் தான் இளையராஜா தன்னுடைய முதல் பட வாய்ப்பான அன்னக்கிளி கிடைத்தது. இந்த படம் 1976ம் ஆண்டில் வெளியாகி 100 நாட்கள் ஓடியதோடு வெள்ளி விழாவும் கண்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களுக்கு இசையமைத்தது உள்ள இளையராஜாவிற்கு பதினாறு வயதினிலே படம் தான் மிகுந்த ஆத்ம திருப்தியை கொடுத்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இசையில் தான் விரும்பும் அனைத்தையும் தான் செய்ய விரும்பியதாக மற்றொரு பேட்டியில் இளையராஜா பகிர்ந்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனனுடனான அந்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொய்யாக இருக்க விரும்பவில்லை: இசையில் தான் பெஸ்ட் என்பது ரசிகர்களின் கருத்துதான் என்றும் தான் அதற்கு எந்த காலத்திலும் பெருமையாக உணர்ந்ததில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தான் இசைக்கு எப்போதும் உண்மையாக இருந்துள்ளதாகவும் தனக்கும் உண்மையாக இருந்து வருவதாகவும் இளையராஜா இந்தப் பேட்டியில் பேசியதையும் பார்க்க முடிந்தது. தனக்கு தான் பொய்யாக இருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தான் நினைக்கும் கருத்தை மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக பேசும் சுபாவம் கொண்டவர் இளையராஜா. இதனால் அவருக்கு கர்வம் அதிகம் என்ற விமர்சனமும் மேதைகளுக்கே உரிய கர்வம் அது என்ற விமர்சனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











