Vijayakanth: விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா!
சென்னை: இன்று காலை 6 மணியளவில் நடிகர் விஜயகாந்த் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்திற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையொட்டி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்று இன்று அவர் மறைந்தார்.
தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த விஜயகாந்த், தன்னுடைய சமூக பணிகள் மூலம் ஏராளமான மனிதர்களின் இதயத்தில் இடம்பெற்றுள்ளார் என்பதற்கு அவரது வீட்டின் முன்பு இறுதியாக அவரை பார்க்க குவிந்துள்ள ரசிகர்களே சாட்சி. தற்போது மக்கள் பார்வைக்காக அவரது உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்பட உள்ளது. நாளை மாலை அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ள நிலையில், நாளை பிற்பகல் மீண்டும் அவரது உடல் கோயம்பேட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மறைவு: வாழும் காலத்தில் ஒருவரின் நல்ல செயல்கள் மட்டுமே சாகும்போது அவருடன் கூட வரும் என்று கூறப்படுவதுண்டு. இந்த விஷயத்தை நிரூபித்தவர்கள் சிலர் மட்டுமே மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களாக இன்றும் காணப்படுகின்றனர். இந்த வார்த்தைகளுக்கு வாழ்ந்த உதாரணமாக செயல்பட்டவர் தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் அவர்கள். தன்னை நாடி வந்தவர்களுக்கு வயிராற சோறு போட்டு அழகு பார்த்தவர் விஜயகாந்த். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பிறகு மக்களின் பசியை போக்கியவர் என்றும் கருப்பு எம்ஜிஆர் என்றும் புகழப்படுபவர் விஜயகாந்த்.
உடல்நலக் குறைவால் பாதிப்பு: கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் விஜயகாந்த். தன்னை நடிப்பிலிருந்தும் அரசியலில் இருந்து விலக்கிக் கொண்ட அவர், ஓய்விலும் சிகிச்சையிலும் இருந்தார். கடந்த சில தினங்களாக அதிகமான மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்று இன்றைய தினம் அவர் காலமானார். அவருக்கு ரசிகர்கள், தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்திற்கு அஞ்சலி: கோயம்பேட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அங்கு கடைசியாக விஜயகாந்தை பார்ப்பதற்காக கூடியுள்ளனர். இதனால் அந்த இடமே இடநெருக்கடியால் ஸ்தம்பித்துள்ளது. இதனால் அவரது உடலை சென்னை தீவுத்திடலுக்கு மாற்ற தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக எடுத்து செல்லப்பட உள்ளதாகவும் மீண்டும் பிற்பகலில் கோயம்பேட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா அஞ்சலி: விஜயகாந்த் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் விமல், அர்ஜூன் உள்ளிட்டவர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் அர்ஜூன் கலங்கிய நிலையில், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்த இளையராஜா அஞ்சலி செலுத்திவிட்டு பிரேமலதா உள்ளிட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இளையராஜா -விஜயகாந்த் கூட்டணியில் சிறப்பான பல பாடல்கள் உள்ள நிலையில், விஜயகாந்திற்காக சிறப்பான பல பிஜிஎம்களையும் இளையராஜா கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











