Sam CS: நான் மோசடி செய்தேனா? நடந்தது இதுதான்.. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வெளியிட்ட அதிரடி அறிக்கை!
சென்னை: தமிழ் சினிமாவில் தனது அழுத்தம் திருத்தமான பின்னணி இசையால் பாராட்டுக்களை குவித்து வருபவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இவரது பாடல்கள் ஹிட் அடிக்கிறதோ இல்லையோ, பின்னணி இசை தரம் என்று பாராட்டும் அளவுக்கு அமைத்துக் கொடுத்துவிடுவார். இன்னும் சொல்லப்போனால், அவரது பின்னணி இசை தான் அந்த படத்தை மக்கள் மனதில் நிலைநிறுத்தச் செய்யும் அளாவுக்கு உள்ளது என்று சொல்லும் அளவுக்கு அவரது பின்னணி இசை சிறப்பாக இருந்துள்ளது. இந்நிலையில் இவர் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பண மோசடி புகார் ஒன்றை சென்னை, கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்தார். இந்நிலையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தன் மீதான பண மோசடி குற்றச்சாட்டு விளக்கம் அளித்துள்ளார்.
சாம் சி.எஸ். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான தமிழ் படமான ஓர் இரவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திற்கு பின்னர் அவருக்கு உடனே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பின்னர் 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் தான் இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்றார். இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படம் அவரது இசைக்கு என தனி அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த ஆண்டே வெளியான கைதி படம் சாம் சி.எஸ்க்கு மேலும் புகழ் சேர்த்தது. இவரது பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும், சாம் சி.எஸ் என்றாலே பின்னணி இசைதான் என்ற எண்ணம் திரைத்துறையில் ஏற்பட்டுவிட்டது.
பின்னணி இசை: இவரது அட்டகாசமான பின்னணி இசை, இவரை தமிழ் சினிமாவைக் கடந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களுக்கு இசை அமைத்தாலும், சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் நிலையத்தில் புகார்: இந்நிலையில், தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது பண மோசடி புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் சமீர் அலிகான் அளித்த புகாரில், " கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசையமைக்க சாம் சி.எஸ்-ஐ ஒப்பந்தம் செய்தோம். அதற்காக அவருக்கு ரூபாய் 25 லட்சம் முன்பணம் ஆகவும் கொடுத்தோம்.

ஏமாற்றிவிட்டார்: சில பல காரணங்களால் படத்தை அப்போது தொடர்ந்து எடுக்க முடியவில்லை. தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த படத்திற்கு இசையமைத்து கொடுக்கச் சொல்லி அவரிடம் பலமுறை முறையிட்டும் அவர் இசை அமைத்துக் கொடுக்கவில்லை. இந்நிலையில் பணத்தை திருப்பிக் கேட்டால், பணத்தையும் திருப்பி தராமல் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்" என்று பொருள்படும் படி குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சமீர் அலிகானின் இந்த புகார் குறித்த தகவல்கள் தற்போது திரைத்துறை வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. இணையத்திலும் சாம் சி.எஸ் மீதான புகார் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வந்தது.
விளக்கம்: இந்நிலையில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், " கடந்த 2020ம் ஆண்டில் தயாரிப்பாளர் திரு சலீம் அலிகான் என்பவர் தான் தயாரிக்க இருக்கும் தமிழ்திரைப்படமான " தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற தலைப்புக் கொண்ட படத்திற்கு இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் தொடர்பில்லாமல் இருந்த திரு சலீம் அலிகான் அவர்கள், திடீரென முழுப் படத்தையும் எடுத்து முடித்து விட்டதாக வாய் வார்த்தையாக சொல்லி என்னிடம் இசையமைக்கச் சொல்லி கேட்டார். ஆனால், இதற்கு முன் ஒப்பந்தம் செய்த திரைப்படங்களின் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், காலதாமதம் ஆகும் என்ற நிலவரத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன்.
பேச்சுவார்த்தை: தான் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு சென்ற திரு சலீம் அலிகான் அவர்கள், கோயம்புத்தூர் காவல்நிலையத்தில் என் மீது புகார் அளித்திருந்தார். அதற்கான எனது தரப்பு விளக்கங்கள் ஆதாரத்தோடு கொடுக்கப்பட்டது, இனி காவல் நிலையத்தால் தான் நினைத்தது நடக்காது என்று உணர்ந்த திரு சலீம் அலிகான் அவர்கள், மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி புகார் அளித்தார். அங்கு திரு கதிரேசன் (செயலாளர்) அவர்கள் முன்னிலையிலும், இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

மோசடி புகார்: இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விட்டு, தயாரிப்பாளரின் நிலைமையை மனதில் கொண்டும், நிர்வாகிகளின் ஆலோசனைப் படியும். ஏற்கனவே மேற்படி திரைப்படம் சம்பந்தப்பட்ட சில பாடல்களுக்கு நான் இசை அமைத்துக் கொடுத்திருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நான் வாங்கிய முன் பணத்தை நானே திருப்பிக் கொடுக்க முடிவு செய்தேன். அதற்கு திரு சலீம் அலிகான் அவர்கள் யோசனை செய்து விட்டுச் செல்வதாகக் கூறிச் சென்றார். இந்நிலையில் தற்பொழுது திரு. சமீர் அலிகான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது ஏதோ மோசடி புகார் அளித்துள்ளார் என்று பல்வேறு ஊடகங்களிலும் இன்று செய்தி வந்திருப்பதை அறிந்து இந்த விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
தூண்டுதல்: ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் பார்க்கிறபோது, மேற்படி சமீர் அலிகான் என்பவர் தானாக அல்லது இன்னும் சிலரின் தூண்டுதலின் பேரில் என்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான செய்தியை, காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தவறான வழியில் என்னிடமிருந்து பணம் பறிக்கும் தீய எண்ணத்துடனும் பரப்பி வருகிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஊடகங்கள் மூலமாக என்னைப் பற்றி அவதூறு பரப்பும் தீய நோக்கம் கொண்டே மேற்படி புகாரை அவர் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கக் கூடும் என்பதை என்னால் உணர முடிகிறது.

சட்டநடவடிக்கை: மேற்படி சமீர் அலிகான் என்பவர் எனக்கு எதிராக கொடுத்துள்ளதாக சொல்லப்படும் புகார் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து எனக்கு இதுவரை அழைப்பாணை எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்பதையும், அவ்வாறான அழைப்பாணை கிடைக்கப் பெற்றதும், அந்தப் புகாரில் என்னைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முழுவதும் அறிந்துகொண்டு, எனது விளக்கத்தை காவல்துறைக்கும், தேவையான நேரத்தில் ஊடகங்களுக்கும் வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.அதே நேரத்தில், மேற்படி சமீர் அலிகான் என்பவர் மீது மட்டுமல்லாமல், அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்து, அவதூறு செய்திகள் மூலம், என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றுள்ள அனைவர் மீதும், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை.இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் தற்போது வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











