கெளரவ டாக்டர் பட்டம்… மாநாடு பிஜிஎம்முடன் மாஸ் என்ட்ரி… மகிழ்ச்சியில் க்யூட்டாக சிரித்த யுவன்!
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரை பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
யுவனின் சாதனைகளைப் பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

25 இயர்ஸ் ஆஃப் யுவனிஸம்
1997ல் சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' படம் மூலம் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது 16வது வயதில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த யுவன், 25 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் வாரிசாக அறியப்பட்ட யுவன், மரபிசையை நவீனத்தின் சாயலில் வடித்து ரசிகர்களை வசீகரித்தார். தமிழ்த் திரையுலகில் யுவனின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

எளிமையில் யுவன் ஒரு சிகரம்
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற சமுத்திரங்களின் நடுவே, பேரருவியாய் ஆர்ப்பரித்தார் யுவன். அதேபோல், யுவனின் குரலில் இருந்த ஈரமும், உயிர்ப்பும் ரசிகர்களின் செவி வழியே ஊடுருவி ஆழ்மனதுக்குள் பாதரசத் துளி போல ரசவாத கிளர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையுடையது. யுவனின் இசைக்கும் அவரின் எளிமைக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் உண்டு. இசையிலும் பண்புகளிலும் ஏஆர். ரஹ்மானின் நகலெடுக்காத அசல் நீருற்றாக யுவனை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்
விருதுகளுக்கும் புகழ்சிகளுக்கும் அப்பாற்பட்டு யுவனின் இசையை ரசிகர்கள் தங்களின் உயிரைப் போல சுவாசித்து வருகின்றனர். இந்நிலையில், 25 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவனுக்கு, சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் யுவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. யுவனுடன் பிரபல விஞ்ஞானி டாக்டர் வி பாலகுருவுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.

யுவன் ரசிகர்கள் கொண்டாட்டம்
சத்யபாமா 31வது பட்டமளிப்பு விழாவுக்கு 'மாநாடு' படத்தின் பிஜிஎம்மோடு மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்தார் யுவன். இதனால் விழா நடைபெற்ற அரங்கம் மாணவர்களின் உற்சாகத்தில் அதிர்ந்து போனது. இதனிடையே நேற்று நடைபெற்ற சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தார் யுவன். அப்போது பேசிய யுவன், "சிம்பு ஒரெயொரு போன்தான் பண்ணார். கண்டிப்பா நிகழ்ச்சிக்கு வர சொன்னார், அதனால் தான் வந்துட்டேன் அதுதான் எங்கள் நட்பு. ஈரம் உள்ள இயல்பான மனிதர் சிம்பு, யாரிடமும் எதையும் எதிர்பார்த்து பயணிக்க மாட்டார்" என நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











