A.R. Rahman: சிங்கப்பூரில் ரசிகர்களை ஏங்க வைத்த ரஹ்மான்.. இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!
சிங்கப்பூர்: தமிழ் சினிமாவைக் கடந்து தென்னிந்திய சினிமாவின் முகமாகவும், அதன் பின்னர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் முகமாகவும் இன்றைக்கு உலகம் முழுவதும் அறியப்படுபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவரது இசைக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்தும் ரசிகர்கள் உள்ளனர். உலகின் எந்த மூலைக்குச் சென்று ரஹ்மான் இசைக் கச்சேரி நடத்தினாலும் இவரது இசையைக் கொண்டாட ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அப்படியான இசையைக் கொடுத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தி கிரேட் ஹிட்ஸ் ஆஃப் ரஹ்மான் என்ற பெயரில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இந்த இசைக் கச்சேரி தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
இசைப் புயல், ஆஸ்கார் நாயகன் என அழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான் படங்களுக்கு இசை அமைப்பது மட்டும் இல்லாமல், இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகின்றார். தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல நகரங்களிலும் இசைக் கச்சேரி நடத்தி வருகின்றார் ரஹ்மான். மேலும் அவ்வப்போது வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரி நடத்தி வருகின்றார். இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டு களிக்க சிங்கப்பூர் மட்டும் இல்லாமல், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரது ரசிகர்கள் வந்துள்ளனர். கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த இசைக் கச்சேரி நடைபெற்றுள்ளது.

இந்த இசைக் கச்சேரியில் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளது. தமிழில் ஊர்வசி, உசுரே நீதானே போன்ற பாடல்களுக்கு ரசிகர்கள் ஏற்படுத்திய ஆரவாரம் பல கிலோமீட்டர்களுக்கு வெளியே கேட்டது என பல கூறியுள்ளனர். இந்த இசைக் கச்சேரியில் பல முன்னணி பாடகர்களும் பல வெளிநாட்டு பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பாடகர்கள் மனோ, ஸ்ரீநிவாஸ், மோஹித் சௌஹான், சக்திஸ்ரீ கோபாலன், ரக்ஷிதா, சுபா, நிசா ஷெட்டி, ஏடிகே, பிளாஸே, ஸ்ரீ ராஸ்கோல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பாடகர்கள் கலந்து கொண்டு பாடினார்கள். இதில் ஏ.ஆர் ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீனும் கலந்து கொண்டு பாடினார்.

மூன்று மணி நேரம்: மொத்தம் மூன்று மணி நேரம் இசைக் கச்சேரி இடைவெளி இல்லாமல் நடைபெற்றது. மெலடி, பீட் சாங்கஸ், ராப் என தன்னிடம் இருந்த வித்தைகளில் பலவற்றை இறக்கினார் ஏ.ஆர். ரஹ்மான். இசைக்கச்சேரியின் முதல் பாடலாக தனக்கு ஆஸ்கார் வாங்கிக் கொடுத்த ஸ்லம்டக் மில்லினர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலை பாடித் தொடங்கினார். அதேபோல் இறுதிப் பாடலாக காதலன் படத்தில் இடம் பெற்ற ஊர்வசி ஊர்வசி பாடலுடன் தனது இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

ராயன்: இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ரஹ்மானைக் கொண்டாடித் தீர்த்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு அழும் காட்சிகளும் இணையத்தில் உலா வருகின்றது. இப்படியான நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் சிங்கப்பூர் இசைக் கச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்வை பகிர்ந்துள்ளார். அதில் ரஹ்மான் இசையில் தமிழில் கடைசியாக வெளியான ராயன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான, உசுரே நீதானே பாடலைப் பாடினார். குறிப்பாக தனுஷ் பாடிய வரிகளை பாடகர் மனோ பாடினார். பாடகர் மனோ பாடலின் பாதி வரிகளைப் பாடிவிட்டு, சிறு இடைவெளி விட்டார். அந்த இடை வெளியில் பின்னணியில் இசையும் இசைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த அரங்கமுமே ரஹ்மானின் குரலுக்காக ஏங்கிக் கொண்டு இருந்தது.
வீடியோ: கிட்டத்தட்ட 10 நொடிகளுக்கு மேல் அமைதியாக இருந்த ரஹ்மான் அதன் பின்னர் உசுரே நீதானே நீதானே எனப் பாடியதும், ஒட்டுமொத்த அரங்கமுமே ஆரவாரம் செய்தது. இந்த வீடியோவைப் இணையத்தில் பார்க்கும்போதே பலருக்கு புல்லரிக்கின்றது. நேரில் கலந்து கொண்டு ரசித்த ரசிகர்கள் பாக்கியசாலிகள் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











