இந்தியாவுல சோத்துக்கே இல்லை.. டாய்லெட் இல்லை.. ஆஸ்காருக்கு வந்துட்டானுங்கனுதான் பார்ப்பாங்க.. ARR பளீச்
சென்னை: தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் தனது வெறித்தனமான இசையால் கட்டிப்போட்டவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் இசையைப் படைத்து ரசிகர்களுக்கு தொடர்ந்து புதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் ஆஸ்கார் நாமினேஷனில் இந்திய சினிமாக்கள் எவ்வாறு கையாளப்படும் என்று தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்கு அவருக்கு கிராமி விருது வழங்கப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கு இரட்டை ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு விருது வாங்கினார். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் இசைப்புயல். இவருக்கு இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் அவருக்கு மரியாதை செய்தது.
இவரது இசையில் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் இருந்து இதுவரை டீசர், டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது மே 24ஆம் தேதி சென்னை, புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நிறவெறி: இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், " ஆஸ்காரில் இருக்கும் தேர்வர்கள் கிழக்கு நாடுகளில் இருந்து ( அதாவது, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற ஆசிய நாடுகள்) படங்கள் போனாலே அதன் மீது நிறவெறி போல ஒரு பார்வையில் தான் பார்ப்பார்கள். இவன் என்னத்த பண்ண போறேன்? இவனுங்க நாட்டுல சோத்துக்கே இல்லை, டாய்லெட் இல்லை. இவன் படத்தை எடுத்துக்கிட்டு இங்க வந்துட்டானா? என்கிற எண்ணம் கட்டாயம் அவர்களிடத்தில் இருக்கும். அதை மீறி நாம் படம் எடுக்கும்போதுதான் எப்படிடா பண்ணீங்க என்ற உணர்வை ஏற்படுத்த முடிகிறது.
அதிர்ச்சி: ஆர்.ஆர்.ஆர் படத்தை ஆஸ்காரில் கொண்டாடினார்கள். நான் அப்போது அங்கு தான் இருந்தேன். மொத்த திரையரங்கும் நிறைந்து காணப்பட்டது. ஆர்.ஆர்.ஆர் படத்தை சிறப்பாக விளம்பரம் செய்திருந்தார்கள். அந்த படத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அவர் ஆஸ்கார் வென்றது மிகப்பெரிய சாதனை" என்று பேசியுள்ளார். அவரது இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும், அவர் கூறுவது நிதர்சனம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இசையில் வித்தியாசம்: மேலும் அவர், " எனது பாடல்கள் முன்னர் வித்தியாசமாக கேட்க காரணமே, முகத்தை திருப்பி வைத்து ரெகார்ட் செய்வதுதான். ஸ்ட்ரியோவில் வித்தியாசம் காட்ட நான் அப்போது எனது யுத்தியாக பின்பற்றினேன். அதை 3டி முறையில் செய்தேன்" என்று தெரிவித்துள்ளார். இதுவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











