குழந்தைகளை என்னிடமிருந்து பிரிக்கிறார்.. பொய் கூறி பாஸ்போட்.. மனைவி மீது வழக்குபோட்ட டி.இமான்!
சென்னை : குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் டி இமான். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார்.
விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் டி இமான்.

டி இமான்
இசையமைப்பாளர் டி இமான், 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு முதன்முறையாக இசையமைத்திருந்தார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார்.

விவாகரத்து
கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேரோனிகா மற்றும் பிலேசிகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

புதிய பாஸ்போர்ட்
அப்போது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனைவிக்கு எதிராக வழக்கு
அந்த மனுவில், ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் கோரி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதிலளிக்க உத்தரவு
குழந்தைகளை சந்திக்க என்னிடமிருந்து பிரிக்கும் வகையில், அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக அவரது மனைவி பொய்யான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











