என்னதான் இருந்தாலும் இளையராஜாவை இப்படி பேசலாமா ஜேம்ஸ் வசந்தன்?.. குவியும் கண்டனங்கள்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக தாக்கி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு ஈசன், பசங்க, நாணயம், நாகராஜசோழன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.

முதல் படத்திலேயே முன்னணிக்கு வந்த ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன் முதல் படமான சுப்ரமணியபுரத்தில் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட்டாகின. குறிப்பாக கண்கள் இரண்டால் பாடலும், காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை பாடலும் படம் வெளியானபோது அனைவரது மனதிலும் இருந்தது. இதனால் அவர் முதல் படத்திலேயே முன்னணிக்கு வந்துவிட்டார். அதன் பிறகு ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். கோலிவுட்டில் ஒரு நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர் என்ற பெயர் எடுத்த ஜேம்ஸ் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன் இப்போது அனைவராலும் அறியப்படும் இசையமைப்பாளராக இருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானது ஒரு தொகுப்பாளராகத்தான். சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அவை அனைத்தும் மக்களிடம் வரவேற்பையே பெற்றன. அவர் ஊடகத்தில் இருந்ததால் என்னவோ மனதில் பட்டதை ஓபனாக பேசும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்.

இளையராஜா Vs ஜேம்ஸ் வசந்தன்
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் பதிவிடும் பதிவுகள் விவாதத்தை கிளப்புபவை. குறிப்பாக இளையராஜா குறித்து அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பேசப்படும். அதேசமயம் இளையராஜா மீது ஜேம்ஸுக்கு ஏன் இவ்வளவு வன்மம், கோபம் என்ற கேள்வியும் எழும். ஆனால் அவர் மீது தனக்கு எந்த வன்மமோ, கோபமோ இல்லை அவர் செய்யும் தவறுகளை நான் சுட்டிக்காட்டுகிறேன் என்று ஜேம்ஸ் தொடர்ந்து கூறிவருபவர்.

இளையராஜாவை கடுமையாக தாக்கி பேசிய ஜேம்ஸ் வசந்தன்
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இளையராஜா மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேம்ஸ் வசந்தன், "இளையராஜா மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. இசையமைப்பாளராக அவர்தான் எனக்கு குரு. இப்போது நான் அடைந்திருக்கும் பெயர், புகழ், வெளிச்சம் அனைத்துக்கும் அவரது இசையிலிருந்து கற்றுக்கொண்டதுதான் காரணம்.

இளையராஜா ஒரு மட்டமான ஆள்
ஆனால் ஒரு மனிதராக இளையராஜா மீது எனக்கு காட்டமான விமர்சனங்கள் இருக்கின்றன. அவர் ஒரு மட்டமான ஆள். சினிமா துறையில் அவரை எல்லோரும் சாமி என்றுதான் அழைப்பார்கள். ஆன்மீகத்துக்குள் செல்ல செல்ல ஒருவருக்கு பக்குவமும், முதிர்ச்சியும், சகிப்புத் தன்மையும், பெருந்தன்மையும்தான் வரும். ஆனால் இளையராஜாவுக்கு அப்படி இல்லை. அவர் வெளியில் அசிங்கமாக பேசுகிறார்.

அமெரிக்காவில் இளையராஜா அப்படி பேசியிருக்ககூடாது
அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்திய இளையராஜாவிடம் இசை குறித்து ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், இயேசு கிறிஸ்து வாழ்ந்தாராம், இறந்தாராம், மீண்டும் உயிர்த்தெழுந்தாராம் என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்றார். இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் ரமண மகரிஷி மட்டும்தான் உயிர்த்தெழுந்தார் என்று சொல்ல வருகிறாராம். இயேசு கிறிஸ்துவை கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். அவர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்" என்றார்.

ஜேம்ஸ் வசந்தனுக்கு குவியும் கண்டனங்கள்
இவரது பேட்டியை பார்த்த பலரும் இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் இப்படி பேசியிருக்கக்கூடாது. இதன் மூலம் அவர் மீது ஜேம்ஸுக்கு இருக்கும் வன்மம் அப்பட்டமாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அவரது பேட்டியில் இளையராஜா கிறிஸ்துவை குறித்து பேசிவிட்டார். அதனால் அவர் மட்டமான ஆள் என்கிறார். இதன் மூலம் தான் சேர்ந்த மதம் குறித்து இளையராஜா பேசியதால்தான் அவரை இவர் தொடர்ந்து தாக்கி பேசிவருகிறாரோ எனவும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர் ரசிகர்கள்.

ஜேம்ஸ் வசந்தனின் லேட்டஸ்ட் பதிவு
சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது. அந்த சமயத்தில் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், "10 Nominations of Ilayaraaja songs இவை ஆஸ்கர் விருது வெல்லத் தகுதியானவை என்று நீங்கள் நினைக்கிற 10 இளையாராஜா பாடல்களைப் பட்டியலிடுங்கள். தபேலா, டோலக்கு, மிருதங்கம் அடிப்படையிலானவற்றைத் தவிர்த்திடலாம். அவற்றுக்கு வாய்ப்பு குறைவு. சர்வதேச ரசிகர்களை மனதில் கொண்டு பட்டியலிடுவது ஏதுவாயிருக்கும்" என் பதிவிட்டிருந்தார்.

இளையராஜா பாடலில் அப்படி எதுவுமே இல்லை
இந்தப் பதிவை பார்த்த பலரும் அதற்கு கீழ் பின்னூட்டம் இட்டனர். அப்படி ஒருவர், 'உங்களது பட்டியல் வேண்டி காத்திருக்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஜேம்ஸ் வசந்தன், "அவர் இசையில் எனக்குப் பிடித்தப் பாடல்கள் கேட்டால் ஏராளமானவற்றைப் பெருங்கதைகளுடன் சொல்லிக்கொண்டே வருவேன். இந்தத் தலைப்பில்.. ஒன்றும் சொல்ல இயலாது' என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இளையராஜா இசையில் சர்வதேச தரத்துடன் பல பாடல்கள் இருக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன் வேண்டுமென்றே இவ்வாறு கூறுகிறார் என விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











