Plane Crash: விமான பயணத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு.. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு!
சென்னை: நாடு முழுவதும் துக்கம் விசாரித்துக் கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது, அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்துதான். 242 பேருடன் புறப்பட்ட இந்த விமானத்தில் ஏற்பட்ட விபத்தினால் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். சுமார் 1 லட்சத்து 25 லிட்டர் எரிபொருளுடன் விமானம் வெடித்ததால் 241 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்ததால் விடுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது மட்டும் இல்லாமல், பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும், அவற்றை டி.என்.ஏ பரிசோதனையுடன் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தாரிடம் வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
ஜேம்ஸ் வசந்தன்: இந்நிலையில் இந்த விமான விபத்தைத் தொடர்ந்து, விமானப் பயணம் மற்றும் விபத்து குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " FLIGHT FRIGHT! விமான விபத்து கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் செய்திதான். ஏனென்றால், அந்த காலம் போல அல்லாமல் இன்று எல்லோருமே பறக்கிறோம். பறக்கிற எல்லோருமே நம் விமானத்துக்கு ஒன்றும் ஆகாது என்கிற வழக்கமான மனித நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் பறக்கிறோம். இதற்குப் பயந்து விமானப் பயணங்களையே தவிர்க்கிற பலரையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் காதுகளுக்கு வரவில்லை என்றாலும் அங்கும் இங்குமாய் விமான விபத்துகள் உலகம் முழுக்க நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

விமானப் பயணம் - பயம்: 2023-ல் 182 விபத்துகளும், 2024-ல் 258-ம் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சிறிய விபத்திலிருந்து உயிரிழைப்பை ஏற்படுத்துகிற பெரிய விபத்துகள் வரை எல்லாமே அடக்கம். ஒன்றிரண்டு மணி நேர உள்நாட்டுப் பயணங்களில் விமானப் பயண அச்சம் பெரிதாக இருப்பதில்லை. ஆனால் வெளிநாட்டுப் பயணம் என்றால் அது வேறு மனநிலைதான். விமானத்தில் ஏறி அமர்ந்து பறக்கத் தொடங்கும் வரை இதைக் குறித்த எண்ணம் வராத ஆளே கிடையாது. எல்லார் மனதிலும் ஒரு கீற்று போல இந்த எண்ணம் வந்துபோகும்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு: அடிக்கடி பறப்பவர் ஒரு துணிவை வரழைத்துக்கொள்வதும், அவ்வப்போது பறப்பவர் கொஞ்சம் அச்சத்தோடு அதை மறக்க முயல்வதும், புதிதாய் பறப்பவர் இறங்கும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உறங்க முடியாமல் தவிப்பதும் அன்றாடம் நடப்பவை. உங்கள் அனுபவத்தில் நீண்ட விமானப்பயணத்தில் உங்கள் மன ஓட்டம் பொதுவாக எப்படியிருக்கும்" என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். குறிப்பாக விமான பயணத்தின் போது அவர்களின் மனதில் என்ன தோன்றும், விமான பயணத்திற்கு அவர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பது குறித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











