போட்டியாளர்களும் மனிதர்கள்தானே.. வெறுப்போடு பேசுவது அழகா? விஜய்சேதுபதியை விளாசிய இசையமைப்பாளர்!
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 55 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் விலகியத்தை அடுத்து. தற்போது இந்த சீசனை, விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், விஜய்சேதுபதியை கடுமையாக தாக்கி பதிவு ஒன்றை தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த நிகழ்ச்சியின் முன்னாள் நடத்துநர் கமல்ஹாசன். இப்போது, விஜய் சேதுபதி. இருவரும் அவரவர் பாணியில் தொகுத்து நடத்துவதும், அதற்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுவதும் இயல்புதானே. கமல்ஹாசன் மேலிருந்த குற்றச்சாட்டு எல்லாரிடமும் ரொம்பவும் மென்மையாக, கொஞ்சம்கூடக் கடிந்துகொள்ளாமல், கண்டிப்பு இல்லாமல் இருக்கிறார் என்பதுதான்.

ஜேம்ஸ் வசந்த் பதிவு: இதையெல்லாம் கேட்டு விட்டுதானே வந்திருப்பார் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் விஜய்சேதுபதியின் இயல்பான, அதிரடியான பாணியைக் கண்டு வியந்தவரும், பாராட்டியவரும் இன்று வெறுப்படையும் நிலைக்குச் சென்றிருக்கின்றனர். போட்டியாளர்களிடம் பேசும் போதும், பிரச்சினைகளை ஆராய்ந்தபோதும் கமல்ஹாசனிடம் பண்பு இருந்தது, முதிர்ச்சி இருந்தது, ஞானம் இருந்தது, மதிநுட்பம் இருந்தது, சமூகப் பொறுப்பு இருந்தது. ஒவ்வொருவரையும் ஆளுமைகளாகவே பார்த்து கையாண்டார்.
காயப்படுத்தவில்லை: அவர்களை நேரடியாகக் குற்றப்படுத்தியதில்லை, சொற்களால் காயப்படுத்தியதில்லை, மட்டுப்படுத்தியதில்லை, தனிப்பட்ட விதத்தில் தாக்கியதில்லை, அவர்கள் உணர்வுகளைச் சீண்டியதில்லை, தனக்கிருந்த உயர்பொறுப்பைக் கொண்டு அவர்களைச் சிறுமைப்படுத்தியதில்லை. இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று புரிந்துகொள்பவர் புரிந்துகொள்ளட்டும்.
அச்சப்படவைக்கிறது: இது ஆணாதிக்க உலகம். நம் தமிழ்ச்சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதன் நிரூபணத்தை இந்த வீட்டில் 55 நாட்களாகக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். தன்னைக் கேள்வி கேட்கிற, விமர்சிக்கிற பெண்களை எப்படி ஆண்களெல்லாம் ஒன்றுசேர்ந்து கடுமையாக, கொடுமையாகத் தாக்கி நிலைகுலையச் செய்து மகிழ்கிறார்களோ, அதையே நிகழ்ச்சி நடத்துநரும் நேற்று செய்தது நம்மை அச்சப்பட வைத்திருக்கிறது.
பெண்கை சிறுமைப்படுத்தி: இவர் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறார் என்பது ஒருபுறம். அதனால் பொதுநலக் கேடு ஒன்றுமில்லை. அது அவர் இயல்பு. நமக்குப் பிரச்சனையில்லை. ஆனால், அத்தனைக் குற்றங்கள் செய்த ஆண்களை விசாரிக்காமல், ஏற்கனவே அவர்களால் உணர்வுபங்கம் செய்யப்பட்டப் பெண்ணை இவரும் சேர்ந்து குற்றப்படுத்தி, சிறுமைப்படுத்தி, தான் செய்ததுதான் தவறு என்று சொல்லவைத்து நொறுங்கவைத்து மகிழ்ந்ததையும் நேற்று கண்டபோது, தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மேலோங்கியது.
ஒரு தொகுப்பாளர்க்கு அழகா? போட்டியாளர்களும் உங்களையும் என்னையும் போல மனிதர்தானே? அவர் அவர்களுக்கு ஒரு பேசும், சிந்திக்கும், செயல்படும் விதம் இருப்பதும் இயற்கைதானே? அதை கிண்டலடிப்பதும், கடுமையாக சாடுவதும், இவர் நினைப்பதையே அவர்கள் சொல்லவேண்டும், அதை இவர் விரும்பும் வண்ணமே சொல்லவேண்டும் என்பதும், சொல்லாவிட்டால் சினமடைவதும், சலித்துக்கொள்வதும், எதிரில் நிற்பவரைப் பொதுவெளியில் கேவலப்படுத்துவதும், வேண்டா வெறுப்போடு அவர்களிடம் உரையாடுவதும் ஒரு தொகுப்பாளர்க்கு அழகா? பணத்துக்காக நிகழ்ச்சி நடத்த வருபவர் குறைந்தபட்ச பொறுப்போடு, கண்ணியத்தோடு, ஈடுபாட்டோடு நடத்தவேண்டும். தமிழ்ச்சமூகமே, விழித்துக்கொள்! வல்லவரெல்லாம் நல்லவர் என்பதில்லை என்பதை விளங்கிக்கொள்! புகழின் உச்சியில் இருப்பவர்க்கு சமூகப் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவூட்டு!' எனப் பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











