ரகுமான் மியூசிக் போடல கார்த்திக் ராஜாதான் போட்டாரு! தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய இசையமைப்பாளனின் கதை
சென்னை: தமிழ் சினிமாவில் மோஸ்ட் அண்டர்ரேட்டேட் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அதில் முக்கியமான இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா. தனது தந்தை இசைஞானி இளையராஜாவோடே தனது இளமைப் பருவத்தைக் கழித்துவிட்டதால் இவர் இதுவரை 50க்கும் குறைவான படங்களுக்கே இசை அமைத்துள்ளார். படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் இவர் கொடுத்த ஹிட் பாடல்களின் எண்ணைக்கை என்பது மிகவுமே கவனிக்கவேண்டியாதாக உள்ளது.
இவர் இசையமைத்த பல பாடல்களைக் கேட்கும் ரசிகர்கள் இந்த பாடலுக்கு இசையமைத்தது இளையராஜா, இந்த படத்திற்கு இசையமைத்தது ஏ.ஆர்.ரகுமான், இந்த பாடலுக்கு இசையமைத்தது யுவன் ஷங்கர் ராஜா என அதிகப்படியான படங்களுக்கு இசை அமைத்து கோலோச்சிய மற்ற இசையமைப்பாளர்களின் பெயரையே சொல்வார்கள்.

உதாரணமாக வள்ளி படத்திற்கு இசை இளையராஜா என்று இருக்கின்றது. ஆனால் ஒரு மேடையில் அந்தப் படத்திற்கு இசையமைத்தது கார்த்திக் ராஜாதான் என ரஜினிகாந்த் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதனை வெளியே சொல்லும் வரை அந்த படத்திற்கு கார்த்திக் ராஜா தான் இசையமைப்பாளர் என யாருக்குமே தெரியாது. அதேபோல் தளபதி படத்திற்குப் பின்னர் இளையராஜாவோடு பணியாற்றுவதை முற்றிலுமா நிறுத்திக் கொண்ட மணிரத்னம் தனது தயாரிப்பில் உருவான டும் டும் டும் படத்திற்கு கார்த்திக் ராஜாவுடன் பணியாற்றினார்.
கார்த்திர் ராஜா ப்ளே லிஸ்ட்: மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளிவந்ததாலும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் படம் வெளியான காலத்திற்கு ஏற்ற வகையில் டிரெண்டாக இருந்ததாலும் பலரும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் என நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். இதுமட்டும் இல்லாமல் ஹிந்தியில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை வென்றவர் கார்த்திக் ராஜா. இப்படி கார்த்திக் ராஜா இசையமைத்த படங்கள் அவரது இசையில் பட்டிதொட்டி எங்கும் கோலோச்சி வரும் படங்கள் குறித்தும் இங்கு விரிவாக பார்க்கலாம்.

முதல் பாடல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாண்டியன் படத்தில் இடம்பெற்றுள்ள "பாண்டியனின் ராஜ்ஜியத்தில" பாடல்தான் கார்த்திக் ராஜா இசையமைத்த முதல் பாடல். இந்த பாடலுக்கு தியேட்டரில் விசிலைப் பறக்கவிட்டு கொண்டாடினர் ரஜினி ரசிகர்கள். கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான ராஜ்கிரணின் மாணிக்கம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் பாடல்கள் ஓரளவுக்கு ஓ.கே ரகமாக இருந்தாலும் சந்தனம் தேச்சாச்சு பாடல் கவனம் பெற்றது. இந்த பாடலை மறைந்த பாடகி பவதாரிணி பாடியிருப்பார்.
மெலடி கிங்: அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்திற்கு தனது மிரட்டலான இசையின் மூலம் தமிழ் திரையுலகேயே திரும்பிப் பார்க்கவைத்தார். குறிப்பாக இந்த படத்தில் கமல் பாடிய முத்தே முத்தம்மா பாடல் இன்றைக்கு கேட்டலும் உலகத்தரத்தில் இசையமைப்பதிருப்பது தெரியும். இதே படத்தில் இருக்கும் "வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா" பாடல் இன்றைக்கும் காதலர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.
தர லோக்கல் குத்து பாடல்: அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலான "இந்த சிறு பெண்ணை எங்கு பார்த்தேன்" என்ற டூயட் பாடலை வெர்ஸ்டன் ஸ்டைலிலும் "கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா" என்ற பாடலை பேஸ் கிட்டாரில் அமைத்து விளையாடியிருப்பார். கமல் ஹாசனின் காதலா காதலா படத்தில் இடம் பெற்றுள்ள "காசுமேலே காசு வந்து கொட்டுகிற நேரம் இது" பாடல் மூலம் தனக்கு குத்து பாடல்களும் அமைக்கத்தெரியும் என நிரூபித்திருப்பார். இந்த பாடலை இன்றைக்கும் பலர் தேவாவின் இசையில் அமைக்கப்பட்ட பாடல் என நினைத்துக் கொண்டு உள்ளனர். மேலும் இதே படத்தில் இடம் பெற்றுள்ள "மடோனா பாடலா நீ" பாடல் ரிலீசான காலகட்டத்தில் பல கல்லூரி ஆண்டு விழாக்களில் ஒளிபரப்பி மாணவிகள் நடனமாடினர்.

ஹிட் பாடல்கள்: டும் டும் டும் படத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய "ரகசியமாய் ரகசியமாய்" பாடலும் "உன்பேரைச் சொன்னாலே" பாடலும் இப்போதுவரை பலரது ப்ளே லிஸ்ட்டில் இருக்கின்றது. அதேபோல் "தேசிங்கு ராஜா" பாடலும் "சுற்றும் பூமி சுற்றும்" பாடலும் இன்றைக்கும் பல பெண்களின் மனதை கவர்ந்த பாடலாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த கலகலப்பான பாடல் என்றால் அது "அத்தான் வருவாக" பாடல்தான். இந்த பாடல் ஒலிக்காத கல்யாண வீடுகளே இல்லை எனும் அளவிற்கு இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்திற்கு ரகுமான் தான் இசையமைத்தார் என நினைத்தவர்களும் உண்டு, விஷயம் தெரிந்தவர்கள் ரகுமானுக்கு போட்டியாக கார்த்திக் ராஜா வந்து விட்டார் என பேசியவர்களும் உண்டு.
ஆனந்த கண்ணீர் வரவைக்ககூடிய இசை: அதேபோல் கேட்போரின் கண்களின் கண்ணீர் வரவைக்ககூடிய அளவிற்கும் பாடல்கள் அமைத்துள்ளார் கார்த்திக். உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் கொள்ளை போகுதே பாடலைக் கேட்டால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இளையராஜா பணியாற்றிய பல படங்களுக்கு பின்னணி இசை அமைப்பதில் கவனம் செலுத்தி வந்ததால் அவரால் தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்கள் அமைத்துக் கொடுக்க முடியவில்லை என்பது ஒரு காரணம் என்றாலும், கார்த்திக் ராஜாவுக்கே பின்னணி இசை அமைப்பதில்தான் ஆர்வம் அதிகம் எனக் கூறியுள்ளார். இளையராஜா மட்டும் இல்லாமல் பல்வேறு இசையமைப்பாளர்கள் பணியாற்றிய படங்களுக்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்துள்ளார். இவர் இன்று தனது 53வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை தொடர்ந்து கொடுக்க வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











