இளையராஜாவின் கோபத்திற்கு இதுதான் காரணம்.. உண்மை சொன்ன மகன்
சென்னை: மிகப்பெரிய கோபக்காரராக அறியப்படும் இளையராஜா குறித்து அவரது மகன் கார்த்திக் ராஜா பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் திரையிசையை புதிதாக கட்டமைத்தவர் இசைஞானி இளையராஜா. 50 வருடங்களுக்கும் மேலாக இசையமைக்கும் அவர் தமிழ் தவிர இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இசையமைத்திருக்கிறார். அவரது பாடல்கள் இல்லாமல் யாராலும் ஒரு நாளை கடக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். அவ்வளவு இசையமைத்திருக்கிறார்.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா
ஒருகாலத்தில் முன்னணி ஹீரோக்களைவிட ஒரு நாளில் அதிக படங்களுக்கு பணியாற்றியவர் இளையராஜா. ஒரே நாளில் 5 முதல் 6 படங்களுக்கு ரீ ரெக்கார்டிங் செய்த சாதனை அவரிடம் இருக்கிறது. தலைமுறைகளை தாண்டி ரசிக்கப்படும் அவர் இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் மேஸ்ட்ரோ என்ற பட்டத்தையும் அவர் பெற்றிருக்கிறார். இப்படி பல சாதனைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தன்னிகரில்லா கலைஞன் இளையராஜா. சமீபத்தில் விடுதலை படத்திலிருந்து அவர் இசையமைப்பில் வெளியான பாடல் அனைவரையும் ரசிக்க செய்தது.

கோபக்காரர் இசைஞானி இளையராஜா
அதேசமயம் இளையராஜா மிகப்பெரிய கோபக்காரர் என்று பலர் கூறுவதுண்டு. மேலும், இளையராஜாவுக்கு இவ்வளவு கோபம் ஆகாது என பலர் அவரை விமர்சிப்பவர்களும்; பல சாதனைகளை செய்த அவருக்கு கோபம் வருவது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை என்று ஆதரிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சூழலில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இளையராஜாவின் கோபம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார்.

கார்த்திக் ராஜாவின் சமீபத்திய பேட்டி
அந்தப் பேட்டியில் பேசிய அவர், "அப்பா எந்த நேரத்தில் எப்படி இருப்பார் என்பதை கணிக்க முடியாது. அவரிடம் ஏதேனும் காரியம் நிகழ வேண்டுமென்றால் அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போதுதான் சொல்வேன். சில சமயங்களில் நான் எதற்கு வருகிறேன் என்பதைக்கூட மிகச்சரியாக சொல்லிவிடுவார். ஏனெனில் அவரிடம் அவ்வளவு அனுபவங்கள் இருக்கின்றன.

இளையராஜா கோபத்திற்கான காரணத்தை விளக்கும் கார்த்திக் ராஜா
இளையராஜா மிகவும் கோபப்படுகிறார் என்கிறார்கள். அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். அவர் எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்ததுபோல் சாதனைகளை படைத்தவர். யாரோ ஒருவர் இப்போது எவரெஸ்ட் ஏறுகிறார் என்றால் அவருக்கு அந்த உச்சி மட்டும்தான் தெரியும்.
ஆனால் ஏற்கனவே மேலே நிற்பவருக்கு இப்போது ஏறிக்கொண்டிருப்பவர் எந்த கல்லில் கால் வைத்தால் கால் தடுமாறி கீழே விழுந்துவிடுவார் என்பது தெரியும். காரணம் அவ்வளவு அடிபட்டு அந்த சிகரத்தில் அவர் ஏறியிருக்கிறார்.
எனவே அவர் சொல்வதை நல்லபடியாக, நல்ல விதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் கோபப்படுகிறார் என்றால் நாம் செய்த எந்த விஷயம் அவரை கோபப்படுத்தியது என்பது குறித்து ஆராய வேண்டும்"" என்றார்.


Click it and Unblock the Notifications











