6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர்.. பிரபல இசையமைப்பாளரின் அதிரடி அறிவிப்பு!
ஹைத்ராபாத்: ஹைத்ராபாத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் குறித்து துப்பு கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹைத்ராபாத், சைதாபாத் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த வியாழக்கிழமை போலீஸில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து சிறுமியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அருகில் உள்ள பள்ளகொண்டா ராஜு என்பவரின் வீட்டில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை செய்து கொலை
சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

பெரும் பரபரப்பு அதிர்ச்சி
30 வயதான பள்ளகொண்டா ராஜு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டு தலைமறைவானதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

கையில் பச்சை குத்தியிருந்த ராஜு
இதனை தொடர்ந்து ராஜு குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு 3000 போலீசார் குற்றவாளி ராஜுவை தேடி வந்தனர். ராஜுவின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததை அடையாளமாக வைத்து பல இடங்களிலும் அவரை போலீசார் தேடி வந்தனர்.

இசையமைப்பாளர் ஆர்பி பட்நாயக்
இதனிடையே பிரபல இசையமைப்பாளரான ஆர்பி பட்னாயக், குற்றவாளி குறித்த தகவல் தெரிவிப்போருக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே உயிரிழந்த சிறுமியின் ஆன்மா சாந்தியடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை கொடுத்தால்தான்
இதுதொடர்பான அவரது பேஸ்புக் பதிவில், இந்த குற்றவாளி பள்ளகொண்டா ராஜுவை கண்டுபிடிக்க காவல் துறைக்கு உதவுவோம். இந்த நபருக்கு மரண தண்டனை கிடைத்த பிறகுதான் சிறுமியின் ஆன்மா மகிழ்ச்சியாக இருக்கும். ஹைதராபாத் நகர காவல்துறை அவரை கண்டுபிடிக்க உதவி செய்பவர்களுக்கு 10 லட்சம் பரிசாக அறிவித்துள்ளது.

மவுனிகா என பச்சை குத்தியிருப்பார்
என் தரப்பிலிருந்து, நான் 50,000 ரூபாய் தருவேன். அவரது கையில் "மவுனிகா" என்ற பச்சை குத்தலின் துப்பு நிச்சயம் அவரைப் பிடிக்க உதவும் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து அவர் நம்மைச் சுற்றி இருக்கிறாரா என்று சரிபார்க்கவும்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பள்ளகொண்டா ராஜு தற்கொலை
ஆனால் அதற்குள் குற்றவாளி பள்ளகொண்ட ராஜு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பள்ளகொண்டா ராஜு வாரங்கல் மாவட்டம் நாஷகல் பகுதியில் இன்று ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அம்மாநில காவல்துறை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











