மூட்டை தூக்கி கஷ்டப்படும் மாணவன்.. தவித்துப் போன தமன்.. அடேங்கப்பா இப்படியொரு உதவி செய்யப்போறாரா?
சென்னை: தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகிவரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் பலரது வாழ்க்கை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளது. இதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறிக்கொண்டே போகலாம். அதேபோல் நீயா நானா போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு வேலைக்குச் சென்று கொண்டே படிக்கும் மாணவனின் குடும்ப சூழலைப் புரிந்து கொண்ட இசையமைப்பாளர் தமன், அந்த மாணவனுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் நேற்றைய அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி எப்பிசோடில், கடந்த 23ஆம் தேதி வெளியான வாழை படத்தினை மையமாகக் கொண்டு, படித்துக் கொண்டே வேலை செய்யும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக வாழை படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாணவர்களில் பலரது தினசரி வாழ்க்கை என்பது, பலரது மனதையும் திடுக்கிடச் செய்யும் அளவிற்கும் கண்ணீரையே வரவழைக்கும் அளவிற்கும் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ- மாணவியர் ஓவ்வொருவரும் தினமும் என்னென்ன வேலை செய்கின்றனர். எவ்வளவு மணி நேரம் வேலை செய்கின்றனர் என்பது குறித்தும் இதனால் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பேசினர்.
மூட்டை தூக்கும் மாணவன்: அதில் பேசிய ஒரு மாணவன், நான் மூட்டை தூக்கப் போகின்றேன். ஒவ்வொரு மூட்டையும் 10 கிலோவுக்கு மேல் இருக்கும். நான் ஒவ்வொரு மூட்டையாகத்தான் தூக்குவேன். இதனால் எனக்கு தோல்பட்டை வலிக்கும். ஆனால் நான் அந்த வலியை வெளியே சொல்ல மாட்டேன். இந்த மாணவர் பேசும்போது ஒரு பக்கம் சாய்ந்ததைப் போல் பேசினார். இதனைக் கவனித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், ’ஒரு மாதிரி சாய்ந்துகொண்டே பேசுகின்றீர்களே, உங்களுக்கு அந்த வலி இருக்கின்றதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவன், ஆமாம் சார் எனக்கு இந்த இடத்துல எப்பவுமே வலி இருக்கும் என தனது கழுத்தையும் தோல்பட்டையையும் தொட்டுக் காட்டினார். மேலும் பேசுகையில், நான் மாலை 5 மணிக்கு வேலைக்குப் போவேன். 10 மணி வரைக்கும் வேலை இருக்கும்.
கோபிநாத் கேள்வியும் மாணவனின் பதிலும்: 10 மணிக்கு வேலை முடுச்சு பஸ்ஸில் வீட்டுக்குப் போவேன். சில நேரங்களில் பஸ்ஸை விட்டுவிடுவேன். அப்போதெல்லாம் நான், நடந்தே வீட்டுக்குப் போவேன் எனக் கூறினார். நீங்கள் நடந்து போகும்போது உங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றும் என கோபிநாத் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மாணவன், எங்க அம்மாவ நல்லா பாத்துக்கனும். நல்ல வீடு கட்டி உட்கார வெக்கனும். நல்லா படுச்சு வேலைக்கு போகனும். எங்க அப்பா படுற கஷ்டத்துல அவருக்கு நான் சப்போர்ட்டா இருக்கனும். இதுபோல யோசுச்சுட்டே வீட்டுக்கு நடந்து போயிடுவேன்.
பெட் இல்ல: எங்கவீட்டுல பெட் இல்லை. எங்க அம்மா தரையிலதான் படுக்கறாங்க. அப்போதெல்லாம் எனக்கு பெட் வாங்கி அம்மாவை அதில் படுக்கச் சொல்லவேண்டும் எனத் தோன்றும் எனக் கூறீனார். இந்த மாணவனின் பேச்சு, பலரையும் கண்கலங்க வைத்தது. இதை கவனித்துக் கொண்டு இருந்த அவரது அம்மாவும் அழுதுகொண்டே, எனக்கு எலும்பு தேய்மானம் இருப்பதால், என்னால் வேலைக்கு போகமுடியவில்லை எனக் கூறினார்.
தமன்: இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனைக் கவனித்த இசை அமைப்பாளர் தமன். இந்த மாணவனின் முகவரியை யாராவது எனக்கு கொடுங்கள். நான் அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருகின்றேன். இதனால் அந்த மாண்வன் சீக்கிரமே அவரது வீட்டிற்கு செல்ல உதவியாக இருக்கும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இசை அமைப்பாளர் தமனின் இந்த பதிவு, பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











