விமர்சனங்களுக்கு விஜய் போல் நச்சுனு ஒரு குட்டிக் கதையில் பதிலடி கொடுத்த யுவன்! தளபதி ஃபார் த ரீசன்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ள யுவன் ஷங்கர் ராஜா, படங்கள் இயக்கவும் தனக்கு விருப்பம் இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார்.
யுவன் பாடல்கள் என்றாலே அதனை அவரது ரசிகர்கள் போதை எனக் கூறுவார்கள். அந்த அளவிற்கு தனது இசையால் நமது உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யும் வல்லமை படைத்த இசையை யுவன் ஷங்கர் ராஜா தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகின்றார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் தி கோட் படத்திற்கு இசையமைத்து வருகின்றார். படத்தின் முதல் பாடல் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார்.

இதுமட்டும் இல்லாமல், விஜய் இந்த படத்தில் இன்னொரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலில் மறைந்த பாடகியும் யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணியின் குரலை ஏ.ஐ., மூலம் உருவாக்கி பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன கண்கள் என்ற இந்த பாடல் விஜய்யின் 50வது பிறந்த நாளான இன்று அதாவது ஜீன் 22ஆம் தேதி வெளியாகின்றது.
இயக்குநருக்கு இசை அறிவு முக்கியம்: இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா ஒரு யூட்டூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அவர், " இயக்குநர்களுக்கு கட்டாயம் இசை குறித்த அறிவு இருக்க வேண்டும். அப்படியான அறிவு இருக்கும்போது அது இசையமைப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் என்னால் சிறந்த படத்தை எடுக்க முடியும் ஆனால் இசை குறித்து போதுமான அறிவு இல்லை என ஒரு சில இயக்குநர்கள் இருப்பார்கள். அவர்கள் இசையமைப்பாளரை முழுமையாக நம்பி படத்தை ஒப்படைப்பதுதான் நல்லது. இயக்குநர் ராமைப் பொருத்தவரையில், இதுதான் காட்சி, எனக்கு இதுபோலத்தான் இசை வேண்டும் எனக் கூறுவார். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

விமர்சனங்களுக்கு: மேலும் அந்த பேட்டியில், உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பழைய யுவன் வேண்டும் என்ற கேள்வி உங்களை கோபமடையச் செய்துள்ளதா? நீங்கள் துபாயில் இருப்பது தொடர்பாக பலர் விமர்சனம் செய்கின்றார்களே எனக் கேட்கப்பட்டது, அதற்கு, " நான் எதிர்மறையான விமர்சனங்களை எனது மனதிற்குள் கொண்டு போகவே மாட்டேன். நான் தொடர்ந்து எனது வேலையைச் செய்து வருகின்றேன் எனக் கூறி ஒரு குட்டிக் கதை சொன்னார்.
குட்டிக்கதை: அதாவது, ஒருவன் ஒரு குதிரை வைத்திருந்தானாம். அந்த குதிரையோடு அவன் நடந்து சென்று கொண்டு இருந்தானாம். அப்போது அந்த வழியே வந்த மற்றொருவன், குதிரையை வைத்துக் கொண்டு நடந்து போகின்றாய் எனக் கூறிவிட்டு, அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு அங்கிருந்து போய்விட்டானாம். உடனே குதிரை வைத்திருந்தவன் தனது குதிரை மேலே ஏறி பயணம் செய்ய ஆரம்பித்தனாம். கொஞ்ச தூரம் சென்றதும், இன்னொருவன் எதிரே வந்தானாம். எதிரே வந்தவன், வாயில்லா ஜீவன் மீது அமர்ந்து கொண்டு அதனை இப்படி கொடுமை செய்கின்றாய். உனக்கு மனிதாபிமானமே இல்லையா எனக் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டானாம். உடனே குதிரையில் இருந்தவன் கீழே இறங்கிவிட்டானாம். இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டே இருந்ததாம். எதிர்மறை விமர்சனங்களுக்கு மனதில் இடம் கொடுத்தால் இந்த கதையைப் போலத்தான் ஆகும்" என பதில் அளித்துள்ளார்.

தளபதி ஃபார் ரீசன்: இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பலர் விஜய் படத்துக்கு இசை அமைத்ததும் விஜய் போல் குட்டிக்கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார் என கூறி வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சமீபத்தில் ஸ்டார் மற்றும் கருடன் ஆகிய படங்கள் ரிலீசாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











