'உங்களுக்கா..? இசை எனக்கு கிடைத்ததே கடவுள் கொடுத்த மிகப் பெரிய பரிசு...' இசைஞானி இளையராஜா பேச்சு!
சென்னை: இசை எனக்கு கிடைத்ததே கடவுள் கொடுத்த மிகப் பெரிய பரிசுதான் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மலேசியாவில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.
இதை மலேசியா சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த நிகழ்ச்சி வரும் 14 -ஆம் தேதி நடக்கிறது.

இசை கிடைத்தது பரிசு
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா கூறும்போது,
எனது இசையை, உங்களுக்கு கிடைத்த பரிசு என்கிறீர்கள். என் இசை எனக்கு கிடைத்ததே கடவுள் கொடுத்த பரிசுதான். இந்த உடல் எப்படி வந்தது என நமக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேகத்தோடு இந்த உலகத்துக்கு வருகிறோம். ஒவ்வொரு துறையில் நுணுக்கம் பெற்றவர்களாக வளர்கிறோம்.

தெய்வீகத்தால் அமைந்தது
இப்படி இறைவன் எல்லா விஷயங்களையும் கொடுத்திருக்கிறான் என்பதே அதிசயம். அந்த வகையில் இறைவன் எனக்கு இசையை பெரிய பரிசாக கொடுத்துள்ளான். தாய் மூகாம்பிகைக்காக ஜனனி ஜனனி பாடலை இசை அமைப்பேன் என்று எனக்குத் தெரியுமா? அது தெய்வீகத்தால் அமைந்தது. ஒரு பாடலை நீங்கள் கேட்கிறீர்கள். நான் இசை அமைக்கவில்லை என்றால் அந்தப்பாடலே இல்லை.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
அதுதான் இங்கே முக்கியம். என் இசை நிகழ்ச்சி மலேசியா சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, மதுபாலகிருஷ்ணன், பவதாரிணி, ஸ்வேதா மோகன், உஷா உதூப் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பில்லை
இதில் பேசிய மலேசிய சுற்றுலா கழக இயக்குனர் ரஷிதி அப்துல் ரஹீம், மலேசியாவில் வரும் 14 தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். மலேசியாவில் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்' என்றார். இந்த நிகழ்ச்சியி சுமார் 10 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











