மனைவியின் மூளையில் ரத்த கசிவு.. எப்படியாவது காப்பாற்றுங்கள்.. முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் கோரிக்கை
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவருபவர் நடிகர் முத்துக்காளை. வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி பெயரை பெற்றவர். சில வருடங்களுக்கு முன்புதான் அவர் மொத்தம் மூன்று டிகிரிகளை வாங்கி; படிப்புக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்தார். இந்நிலையில் அவரது மனைவி மாலதிக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
வடிவேலு, விவேக் உள்ளிட்டோரின் காமெடிகளில் தவறாமல் இடம்பிடித்தவர் நடிகர் முத்துக்காளை. முதலில் ஸ்டண்ட் பிரிவில் சாதிக்க வேண்டும் என்றுதான் தனது சொந்த ஊரான ராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு வந்தார். அப்படி வந்தவருக்கு சினிமா ஏகப்பட்ட கஷ்டங்களை கொடுத்தது. வறுமையை சந்தித்தார். ஏவிஎம்மில் சில வேலைகலையும் செய்தார். அத்தனையையும் தாங்கிக்கொண்டு இருந்ததன் பலனாக அவரை நடிகராக ஏற்றுக்கொண்டது. அதன்படி காதலுக்கு மரியாதை, பொன்மனம் உள்ளிட்ட படங்களில் தலை காண்பித்தார்.

நடிகராக பிஸி: ஸ்டண்ட் கலைஞராக வேண்டும் என்று வந்தவர் நடிகராக பிஸியானார். அவரது டயலாக் டெலிவிரி, ஃபிட்டான உடல், காமெடியான எக்ஸ்பிரெஷன்கள் எல்லாம் ரசிகர்களை கவர வடிவேலு, விவேக் உள்ளிட்டோர் காமெடி நடிகர்களாக நடித்த பல படங்களில் முத்துக்காளையும் இடம்பெற்றார். தனக்கு கிடைத்த அத்தனை ரோல்களையும் பார்த்து பார்த்து செய்த அவர்; ஒருகட்டத்தில் பிஸியான நடிகராக மாறிவிட்டார். சிக்கன் 65 காமெடி, பூசணிக்காயை உடைக்கும் காமெடி, செத்து செத்து விளையாடுவோமா காமெடியெல்லாம் அவருக்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தன.
மூன்று டிகிரிகள்: இடையே குடிக்கும் அடிமையாகியிருந்தார். ஒருகட்டத்தில் அதிலிருந்து வெளியே வந்த அவர், சில வருடங்களுக்கு முன்புதான் மொத்தம் மூன்று டிகிரிகளை படித்து வாங்கினார். அப்போது அவருக்கு வயது 50. படிப்பதற்கு வயது எப்போதுமே தடை இல்லை என்ற உதாரணமாகவும் அவர் மாறினார். மேலும் படிப்பு குறித்த முக்கியத்துவத்தையும் ரசிகர்களுக்கு கடத்துகிறார். அவரது மகனும் நல்ல படிப்பை இப்போது படித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துக்காளை மனைவி மருத்துவமனையில்: சூழல் இப்படி இருக்க முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு அண்மையில் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டது. அவருக்கு வயது 47. அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும் கிருமி தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். சுயநினைவும் இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு; மேல் சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக தெரிகிறது.
முத்துக்காளை கோரிக்கை: இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை கிடைக்க முதலமைச்சர் விஜய் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் முத்துக்காளை. கடந்த 17 நாட்களாக தனி மனிதனாக போராடி வருவதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் யூத், தமிழன், மின்சார கண்ணா, பகவதி, சுறா ஆகிய படங்களில் முத்துக்காளை நடித்திருக்கிறார். திரைத்துறையிலிருந்து வந்து முதலமைச்சராகியிருக்கும் விஜய்; தன் துறையில் இருக்கும் சக நடிகரின் கஷ்டத்தை போக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
