என் படத்தை பாரதிராஜா பார்க்கவே இல்லை: புகார் கிளப்பிய சலீம் குமார்
திருவனந்தபுரம்: கேரள அரசு திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா எனது படத்தை பார்க்கவே இல்லை என்று தேசிய விருதுபெற்ற நடிகரும் படத்தயாரிப்பாளருமான சலீம் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள அரசு திரைப்பட விருதுகள் அந்த மாநிலத்தில் உயர்ந்த மதிப்புக்குரிய விருதுகளாக கருதப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவுக்கு தமிழ்த் திரைப்பட இயக்குனரான பாரதிராஜா தலைவராக நியமிக்கப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன் இந்தத் திரைப்பட விருதுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே விருதுக் குழுவின் தலைவரான பாரதிராஜா இந்த விருதுகள் தேர்வுக்காக எத்தனை நாட்கள் கேரளாவில் தங்கியிருந்தார் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 'அன்டு த டஸ்க்' என்ற படத்தின் இயக்குனரான சஜின் பாபு கேட்டிருந்தார். அதற்கான பதில் அவருக்கு வழங்கப்பட்டது.
அதில் பாரதிராஜா விருதுகள் தேர்வுக்காக வெறும் ஏழு நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை பதினைந்து நாட்கள் வரை தங்கியிருந்திருக்க வேண்டும். அப்படியிருக்க அவரால் எப்படி 85 படங்களைப் பார்த்து முடிவெடுத்திருக்க முடியும் என்கிறார்கள்.
இருந்தாலும், பாரதிராஜாவோ நான் அனைத்துப் படங்களையும் பார்த்த பின்புதான் விருதுக்கான அறிவிப்பையே வெளியிட்டோம். இடையில் அவசர வேலையாக சென்னை வரவேண்டியதாக இருந்தது. அதன் பின்னர் மீண்டும் திரும்பி மற்ற படங்களையும் பார்த்து முடித்தேன். அப்படியிருக்க எதற்கு தேவையற்ற சர்ச்சையை கிளப்புகிறார்கள் எனத் தெரியவில்லை என்றார்.
இதனிடையே நடிகர் சலீம்குமார், தன்னுடைய படமான ‘மூணாம் நாள் ஞாயறாழ்ச்சா' என்ற படத்தை பாரதிராஜா பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களையும் சேகரித்துள்ள அவர், கேரள திரைப்பட விருதுகள் குறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விருதுக்காக திரையிடப்பட்ட அனைத்துப் படங்களையும் பாரதிராஜா பார்த்ததாக கூறுவது பொய் என்று கூறும் சலீம் குமார், என்னுடைய படங்களுக்கு விருது கொடுங்கள் என்று நான் கூறவில்லை. தயவு செய்து தேர்வுக்குழுவினர் திரையிடப்படும் படங்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடர்ந்துள்ளேன் என்கிறார்.
பாரதிராஜா தேர்வுக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டபோதே பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மலையாளத் திரையுலகில் பலர் இருக்க, தமிழ்த் திரையுலகில் இருந்து எதற்கு நியமனம் செய்ய வேண்டும் சில முக்கிய மலையாளத் திரையுலகப் பிரபலங்களே எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது வேண்டுமென்றே பாரதிராஜா மீது குற்றம் சுமத்துவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











